ராஷ்மிகாவின் தொடர் காதல்!

மும்பை பரபர
ராஷ்மிகாவின் தொடர் காதல்!

தெலுங்குப் படமான ’புஷ்பா 2’ வில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. நடிக்க வந்த புதிதில் கன்னட ஹீரோ ரக்‌ஷித் ஷெட்டியை உயிருக்கு உயிராகக் காதலித்து, திருமணம் செய்வதற்காக 2017ஆம் ஆண்டு நிச்சயதார்த்த விழா நடந்தது. கருத்து வேறுபாடு காரணம், அடுத்த வருடமே திருமணத்தை ரத்து செய்து இருவரும் பிரிந்துவிட்டனர்.

பின்னர் தெலுங்கு ஹீரோ விஜய் தேவர கொண்டாவைக் காதலிக்க ஆரம்பித்து, மாலத் தீவுக்கு இருவரும் ஜோடியாக சென்று வந்தனர். ஆனால், அவர்கள் காதலிப்பதாக வந்த தகவல்களை இருவரும் ஒரே மாதிரி மறுத்தனர்.

தற்சமயம், 23 வயது நிரம்பிய இளம் கிரிக்கெட் வீரர். சுப்மன் கில் மீது  26 வயதான ராஷ்மிகாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளதாக பாலிவுட்டில் தகவல்கள் பரவி வருகிறது. ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்வில் பங்கேற்ற ராஷ்மிகா மந்தனாவிடம், “சுப்மன் கில் மீது உங்களுக்கு ஈர்ப்பு இருக்கிறதா?’ எனக் கேட்டபோது, சற்றும் தயங்காமல் “ஆமாம்” என்று பதிலளித்தார் ராஷ்மிகா. ஏற்கெனவே ஒரு சமயம் சுப்மன் கில், தனக்கு ராஷ்மிகா மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

‘ஒன்றும் ஒன்றும் இரண்டு!’?

சரியும் தவறுமாக … ஓர்  திரைப்படம்!

ஷிமா சிப்பர் இயக்கத்தில் ராணி முகர்ஜி நடிப்பில் வெளியான இந்திப் படம் ‘மிஸஸ் சட்டர்ஜி Vs நார்வே’

இதன் கதைச் சுருக்கம்:

”இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெங்காலி தாய் நார்வே நாட்டில் தனது கணவருடனும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். குழந்தைகளைப் பராமரிப்பதில் நார்வே நாட்டு சட்ட திட்டங்களை முறையாக கடைபிடிக்கவில்லை என்று குற்றம் சாட்டி, நார்வே நாட்டு அதிகாரிகள் அவரிடமிருந்து குழந்தைகளைப் பறித்து, அங்கிருக்கும் காப்பகத்தில் குழந்தைகளைச் சேர்க்கின்றனர். அச்சமயம் ராணி முகர்ஜியை விட்டு அவரது கணவர் பிரிந்து விடுகிறார். பின்னர் இந்திய அரசாங்கத்தின்  உதவியுடன் சட்டப் போராட்டம் நடத்தி, ராணி முகர்ஜி எப்படி தனது குழந்தைகளை மீட்டு வருகிறார்” என்பதாகும்.

இரு குழந்தைகளுக்குத் தாயாக நடிக்கும் ராணி முகர்ஜிக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் கிடைத்துள்ளது. மும்பையில் இப் படத்தைப் பார்த்த நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

” உண்மைச் சம்பவத்தைப் பற்றிப் பேசும் முக்கியமான படம். இப் படத்தைப் பார்த்தபின்பு நானும், ஜோதிகாவும் கனத்த இதயத்துடன் தியேட்டரை விட்டு வெளியே வந்தோம். அந்த சிந்தனையில் இருந்து இன்னும் நான் வெளியேற முடியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். ராணி முகர்ஜி மற்றும் படக் குழுவினரைப் பாராட்டி வாழ்த்தியுள்ளார்.

இந்நிலையில், நார்வே நாட்டின் தூதரக அதிகாரிகள் இப்படத்தைப் பார்த்துவிட்டு, தங்களது நாட்டின் சட்ட திட்டங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

ஒரு தாய் தனது கையால் குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதாலும், ஒரே படுக்கையை கொடுப்பதாலும் கடுமையான சட்டம் செயல்படுத்தப்படும் என்பதாக இந்தத் திரைப்படத்தில் காட்டியிருப்பது தவறாகும் என்று கூறியுள்ளனர்.

யார் சரி? யார் தவறு?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com