சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக மிகச்சிறந்த பாராட்டுகளைப் பெற்ற ‘இரட்டா’ திரைப்படத்தின் நாயகன் ஜோஜு ஜார்ஜ் விரைவில் தெலுங்கு பேசவிருக்கிறார். இரட்டாவில் அவர் ஏற்றிருந்த இரட்டைக் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு மிக அருமையாக தன்உடல்மொழி மற்றும் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி மொழி பேதமின்றி அனைவரையும் ஈர்த்திருந்தார் ஜோஜூ. தற்போது ஒரு தமிழ் படத்தின் வேலைகளில் மூழ்கி இருக்கும் ஜோஜு ஜார்ஜுக்கு தெலுங்குப் படங்களில் நடிக்க அத்தனை பெரிதாக விருப்பம் இருந்ததாகத் தெரியவில்லை.
ஆனால், வெளிவரவிருக்கும் புதிய தெலுங்குத் திரைப்படமொன்றில் உப்பேன்னா புகழ் வைஷ்ணவ் தேஜுக்கு வில்லனாக நடிக்கவிருக்கிறாராம். இதை அப்படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ரெட்டி உறுதிப்படுத்தி இருக்கிறார்.
ஜோஜூ ஜார்ஜை தங்கள் படங்களில் நடிக்க வைக்க தெலுங்கு இயக்குநர்களிடையே பலத்த போட்டி நிலவுகிறது. ஆனால், அவர் எல்லோருக்கும் ஓ கே சொல்லி விடவில்லை. முதலில் தெலுங்குப் படங்களில் நடிக்க அவருக்கு அத்தனை பெரிதாக ஆர்வம் இருந்ததாகத் தெரியவில்லை. அவர் இங்கிருந்து வந்த நிறைய ஆஃபர்களை முதலில் மறுத்து விட்டார். இப்போது அவர் இந்தப் புதிய படத்திற்காக எங்களுடன் இணைந்திருப்பதை நினைத்தால் எனக்கு கனவு போலத்தான் இருக்கிறது.
எங்கே அவர் மறுத்து விடக்கூடாதே என்று நான் நேராக கொச்சிக்கே சென்று நேரில் கதையைச் சொல்லி அவரைச் சம்மதிக்க வைத்தேன் என்கிறார் ஸ்ரீகாந்த் ரெட்டி. கமர்சியல் எண்டர்டெயினர் ஜானர் என்றாலும் கூட இந்தக் கதை மிக வலுவானது. இதில் ஜோஜூ ஏற்று நடிக்கவிருக்கும் செங்கா ரெட்டி கதாபாத்திரம் அப்பட்டமான ராயலசீமா மனிதனைப் பற்றியது. அதற்கான மொழி உச்சரிப்பே நேட்டிவிட்டியுடன் வேறு லெவலில் இருக்கும். தனது பாத்திரத்துக்கு தானே தான் டப்பிங் பேச வேண்டும் என்று ஜோஜூ விரும்புகிறார்.
ஸ்லாங் துளி மாறினாலும் பாத்திரத்தின் கனம் தொலைந்து விடும். எனவே அதை படப்பிடிப்பு தொடங்கியதும் பார்த்துக் கொள்ளலாம் என்று அவரிடம் சொல்லி இருக்கிறேன். என்கிறார் ஸ்ரீகாந்த் ரெட்டி.
ஜோஜூ ஜார்ஜைப் பொருத்தவரை அவருக்கு இதெல்லாம் ஒரு பெரிய கடினமான காரியமாக இருக்காது என்று தான் தோன்றுகிறது. இரட்டா போன்ற மிகக் கனமான இரட்டைக் கதாபாத்திரங்களையே அலட்டிக் கொள்ளாமல் வெகு சாதாரணமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை அள்ளிக் கொண்டவர் ஆயிற்றே! என்கிறார் இயக்குநர்.