பாலியல் குற்றங்களுக்குக்கான முற்றுப்புள்ளி ‘மெய்ப்பட செய்’!

பாலியல் குற்றங்களுக்குக்கான முற்றுப்புள்ளி  ‘மெய்ப்பட செய்’!

ஹர்ஷித் பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.தமிழ்ச்செல்வம் தயாரிப்பில், வேலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெய்ப்பட செய்’. அறிமுக நடிகர் ஆதவ் பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், மதுனிகா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் தயாரிப்பாளர் தமிழ்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன், ஓ.ஏ.கே.சுந்தர், இயக்குநர் ராஜ்கபூர், ராகுல் தாத்தா, சூப்பர் குட் சுப்பிரமணி, விஜய கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ள ‘மெய்ப்பட செய்’ பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்துப் பேசியிருப்பதோடு, வேகமான காட்சிகளோடும், விறுவிறுப்பான திரைக்கதையோடும் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையிலான படமாக உருவாகியுள்ளது.

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மையப்படுத்தி பல படங்கள் வந்திருந்தாலும், அப்படங்களில் குற்றங்கள் எதனால் நடக்கிறது அல்லது குற்றங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும், போன்றவற்றைச் சொல்வதில்லை. பாலியல் குற்றங்களும், அதற்கான பழிவாங்குதல் என்ற பாணியில் மட்டுமே இருக்கின்றன. ஆனால், ‘மெய்ப்பட செய்’ படத்தில் பாலியல் குற்றங்கள் எதனால் நடக்கிறது என்பது பற்றி விரிவாக பேசப்பட்டிருப்பதோடு, பாலியல் குற்றங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற தீர்வும் சொல்லப்பட்டிருக்கிறது.

சமூக அக்கறையோடு கிராமத்தில் வாழும் நான்கு நண்பர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் தனது காதல் மனைவியோடு சென்னை வர நேரிடுகிறது. சென்னையில் வாழ வழி தேடும் அவர்கள் கண்முன்னே பாலியல் குற்றவாளிகளின் கொலை வெறியாட்டத்தைக் காண நேரிடுகிறது. சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து பகிரங்கமாக மக்களையும் காவல் துறையையும் தங்களது ரவுடித்தனத்தாலும், ஆளுமையாலும் அடிபணிய வைத்துச் சுற்றிக்கொண்டிருக்கும் இந்தக் கும்பலைத் தனி மனிதர்களாக இந்தக் கிராமத்து இளைஞர்கள் போராடி, சமுதாயத்துக்கு முன் குற்றவாளிகளைத் தோலுரித்து காட்டுகிறார்கள்.

மக்களுக்கான நம் நாட்டின் சட்டம் தப்பு செய்தவர்களை தண்டித்ததா இல்லை அப்பாவிகளைக் குற்றவாளிகளாக்கியதா என்பது தான் இப்படத்தின் கதை.

சமீபத்தில் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள், படம் பார்ப்பவர்களுடன் கனெக்ட் ஆவது போல் படம் நகர்கிறது, என்று சொல்லிப் பாராட்டியதோடு, படத்தில் எந்தவிதக் கட்டும் கொடுக்கவில்லையாம். சில காட்சிகளின் கோணத்தை மட்டும் மாற்றும்படி சொல்லியவர்கள், படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக் காட்சிகளுக்காக படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

ஜனவரி 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ’மெய்ப்பட செய்’ வழக்கமான படமாக இல்லாமல் சினிமா ரசிகர்களுக்கு ஏற்ற ஜனரஞ்சகமான படமாக மட்டும் இன்றி, சமூக அக்கறையுடன் கூடிய தரமான படமாகவும் இருக்கும், என்று தயாரிப்பாளர் பி.ஆர்.தமிழ்ச்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கதை அமைத்து, திரைக்கதை வசனம் எழுதி, அறிமுக இயக்குநர் வேலன் சிறப்பாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் ஆர்.வேல் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.ஜே.வெங்கட்ரமணன் இப்படத்திற்கு படத்தொகுப்பை கொடுத்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com