புலியை வேட்டையாடும் டைகர் நாகேஸ்வரராவ்!

புலியை வேட்டையாடும் டைகர் நாகேஸ்வரராவ்!

ஒவ்வொரு நடிகரையும் ரசிகர்கள் அடைமொழியுடன் அழைப்பது போல் ரவி தேஜாவை தெலுங்கு ரசிகர்கள் மாஸ் மகாராஜா என்று அழைக்கிறார்கள். சினிமா உலகில் இருப்பவர்கள் ஸ்டார் என்று தான் அழைக்கப்படுவார்கள். ஆனால் மகாராஜ் என்ற செல்லப்பெயருடன் அழைக்கப்படுபவர் ரவி தேஜா மட்டுமே. இந்த மகாராஜ் மகா மாஸாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் பெயர் டைகர் நாகேஸ்வரராவ்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ், கார்த்திகேயா 2, என இந்திய அளவில் பிளாக்பஸ்டர்களை வழங்கிய அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தற்போது தென்னிந்தியா மற்றும் வட இந்தியா முழுமைக்குமான ஒரு பான் இந்திய திரைப்படமான “டைகர் நாகேஸ்வர ராவ்”  படமாக  ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது.  இந்தியா முழுதும் ரசிகர்களை கொண்டிருக்கும் ரவிதேஜா இப்படத்தில் நடிக்கிறார்.  இயக்குநர் வம்சி இயக்குகிறார். இப்படத்தின் துவக்கமே அனைவரது புருவத்தையும் உயர்த்தும் வகையில் மிக பிரமாண்டமாக துவங்கியுள்ளது. படத்தின்  அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சுவாரஸ்யமான ஒரு  வீடியோவை  தற்போது தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ராஜமுந்திரியில் உள்ள ஹேவ்லாக் பாலம் எனும் இடத்தில் பிரம்மாண்டமாக பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவிற்கென  ஒரு ரயிலை வாடகைக்கு எடுத்துள்ளனர் தயாரிப்பாளர்கள். புதுமையான இந்த நிகழ்வு அனைவர் மத்தியிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அடர்ந்த தாடியுடன் முரட்டுத்தனமான கெட்-அப்பில் காணும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில்,  ரவி தேஜா கம்பிகளுக்குப் பின்னால் உறுமும் புலி போல மிரட்டுகிறார். ஒரு போஸ்டர் தான் என்றாலும்  அவரது கண்கள் பார்க்கும்போது நம்மிடம்  பயத்தை விதைக்கிறது. டைகர் நாகேஸ்வர ராவின் உலகை அறிமுகப்படுத்தும் வகையில் இந்த ஃபர்ஸ்ட் லுக் கான்செப்ட் போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் வீடியோ ஐந்து வெவ்வேறு மொழிகளில் ஐந்து வெவ்வேறு சூப்பர்ஸ்டார்களின் குரலில், அசத்தலால வெளியாகியுள்ளது. தெலுங்கு பதிப்பிற்கு வெங்கடேஷ் குரல் கொடுக்க, ஜான் ஆபிரகாம், சிவ ராஜ்குமார், கார்த்தி மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் முறையே இந்தி, கன்னடம், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் டைகர் நாகேஸ்வர ராவின் உலகத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

“1970 ஆம் வருடங்களில் வங்காள விரிகுடா கடலோரப் பகுதியில் உள்ள ஒரு குட்டிக் கிராமம்... உலகையே பயமுறுத்தும் இருள் கூட அங்குள்ள மக்களைப் பார்த்து அஞ்சுகிறது...  தென்னிந்தியாவின் குற்றத் தலைநகரம் ஸ்டூவர்ட்புரம்... அந்தப் பகுதிக்கு இன்னொரு பெயர்... டைகர் சோன்... டைகர் நாகேஸ்வர ராவின் கோட்டை...” என்று குரல்  விளக்குகிறது.

வீடியோவில் வரும் வசனத்தில்- “புலி மானை வேட்டையாடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம்? புலி  புலியை வேட்டையாடுவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?"  என ரவி தேஜா கூறியது அந்த கதாபாத்திரத்தின்  தன்மையை விவரிக்கிறது. சூப்பர் ஸ்டார்களின் குரல்வழி  சித்தரிப்புகள் இந்த வீடியோவை இன்னும் சுவாரஸ்யமாக்குகின்றன.

இயக்குநர் வம்சி ஒரு அதி அற்புதமான திரைக்கதையுடன் மிகப் புதுமையான வகையில் வழங்குகிறார்.  இந்திய அளவில் பிரபலமான சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து மிக நவீனமான வகையில் ஒரு புதிய அனுபவத்தை வழங்கவுள்ளார்கள். 

அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் பிரமாண்டம், ஒளிப்பதிவாளர் R மதி ISC ஒளிப்பதிவில், இயக்குநர் வக்சியின் காட்சிகள்,  GV பிரகாஷ் குமார் இசையயில் நம்மை வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்கிறது. ரவி தேஜாவின் உடல் மொழி, வசனம், கெட்அப் ஆகியவை இதுவரை இல்லாத வகையில் மாறுபட்டதாக இருக்கிறது. பர்ஸ்ட் லுக் மற்றும் கான்செப்ட் வீடியோ நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

டைகர் நாகேஸ்வர ராவின் பாக்ஸ் ஆபிஸ் வேட்டை அக்டோபர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும்,  பிரமாண்டமாக தசரா  பண்டிகையுடன் துவங்கவுள்ளது.இந்த தசரா மாஸ் மகா ராஜாவின் தசராவாக தெலுங்கு ரசிகர்களுக்கு  அமைய உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com