அரசியல் தலைவர்கள் படங்களில் ஏன் பெரியார் படம் இல்லை? – சர்ச்சைக்காளாகியிருக்கும் ”பப்ளிக்” திரைப்படம்!
கே.கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’. விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக்கள் கவனத்தை ஈர்த்தன. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ‘உருட்டு, உருட்டு’ பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதற்கு அடுத்து வெளி வந்த ஸ்னீக்பீக்கில், ‘மாடே, மாடே’ என்று மாட்டை வைத்துப் பெட்ரோல் டீசல் விலை உயர்வை நக்கல் செய்யும் காட்சி புதுமையான நையாண்டித் தனத்தோடும், அதே நேரத்தில் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இருந்தது.
அடுத்தாக வெளியான ஸ்னீக்பீக்கில் அரசியல் தலைவர் ஒருவர், தமிழே அறியாத ஒரு பெண்ணுக்கு தனது கட்சிப் பெயரை சொல்லித்தருவது போலவும், ‘கட்சிப் பெயரே சொல்ல வரலை… எப்படி சீட் வாங்கித் தருவது’ என்று கேட்பது போலவும் ஒரு ஸ்னீக்பீக் வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடந்து வெளியான இன்னொரு ஸ்னீக்பீக்கில், ‘திருக்குறள் எழுதுனது திருவள்ளுவரா?’ என்று இலக்கிய அணிப் பொறுப்புக்கு வரும் ஒருவர் கேட்கும் வீடியோ வெளியாகி, இன்றைய அரசியல் நிலையைக் காட்டுவது போல் அமைந்து இருந்தது.
வித்தியாசமான போஸ்டர்கள் மற்றும் ஸ்னீக்பீக்குகளால் கவனம்பெற்றுவரும் பப்ளிக் படம் என்ன சொல்ல வருகிறது, எந்த அரசியலைப் பேசப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் தற்போது பப்ளிக் படத்தின் முதல் பாடலான ‘உருட்டு, உருட்டு’ பாடல் மக்கள் மத்தியில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
யுகபாரதி எழுதயுள்ள இந்தப் பாடல் அனைத்து அரசியல் கட்சிகளையும் பாரபட்சம் இல்லாமல் விமர்சனம் செய்திருக்கிறது.
சிங்காரவேலர், ரெட்டைமலை சீனிவாசன்,அயோத்திதாச பண்டிதர், நடேசனார், கக்கன், சத்தியமூர்த்தி, பாரதிதாசன், இளையபெருமாள், பட்டுகோட்டை அழகிரி, ஜீவா, நெடுஞ்செழியன், மூக்கையா தேவர், ராமமூர்த்தி, அன்னிபெசன்ட் அம்மையார், காயிதேமில்லத் படங்களை வைத்து வெளியிட்ட ஃபஸ்ட் லுக் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் பெரியார் படம் புறக்கணிக்கப்பட்டது குறித்து பெரும் விவாதம் எழுந்தது. சமுக ஊடகத்தில் இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.