இந்தியாவில் தன் பாலின ஈர்ப்பு என்பது தவறான ஒன்று இல்லை. இவர்களுக்கும் நம்மை போல் வாழ உரிமை உண்டு என நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் உறுதி செய்துள்ளது. இருப்பினும் நம் சமூகம் தன் பாலின ஈர்ப்பாளர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த கருத்தை மைய்யமாக வைத்து வந்துள்ள படம்தான் ’வாழ்வு தொடங்கும் இடம் நீதானே’ ஷார்ட் பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் இந்த படம் வெளியாகி உள்ளது.
ஜெயராஜ் பழனி இயக்கியுள்ள இப்படத்தை நடிகை நீலிமா இசை தயாரித்துள்ளார். தரங்கம்பாடியில் உள்ள ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் வாழும் பெண் ஷகீரா. அதேபோல் ஆராய்ச்சிக்காக திருச்சியிலிருந்து வரும் வினோதா என்ற பெண் ஷகீரா வீட்டில் தங்குகிறார். இந்த இரண்டு பெண்களும் காதலிக்கிறார்கள். இந்த விஷயம் ஷகீராவின் அப்பாவிற்கு தெரிய வர இருவரையும் அடிக்கிறார்.
இர்பான் என்ற இளைஞனை ஷகிராவுக்கு திருமணம் செய்து வைக்க அவசரமாக முடிவு செய்கிறார். ஷகீரா இர்பானை அணுகி வினோதாவுடன் சேர்த்து வைக்க உதவி கேட்கிறார். இர்பானும் ஒத்து கொள்கிறார். இவர்களின் உறவை சமூகமும், மதமும் ஏற்றுக்கொண்டதா என்பதை இந்த படம் சொல்கிறது. தேவையற்ற எந்த ஒரு விஷயத்தையும் சொல்லாமல் தேவையானதை மட்டும் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.
துளியும் ஆபாசம் இல்லாமல்,இரட்டை அர்த்த வசனம் இல்லாமல் நேர்மையாக உணர்வுகளை சொல்லி உள்ளது இப்படம். தன் பாலின ஈர்ப்பாளர்களாக வரும் நிராஞ்சனா, சுருதி பெரியசாமியும் சிறப்பாக நடித்துள்ளார்கள். இந்த படம் தன் பாலினத்தை நியாயப் படுத்துவதை விட எங்களையும் மனிதாபிமானம் கொண்டு நடத்துங்கள் என்கிறது. மதங்கள் சொல்வது அன்பு என்றால் இவர்களை வெறுக்காதீர்கள். அன்பு செலுத்துங்கள் என்கிறது இப்படம். காதலுக்கு ஜாதி, மதம் பேதம் மட்டும் இல்லை. பாலின பேதமும் கிடையாது என்கிறது வாழ்வு தொடங்கும் இடம் நீதானே திரைப்படம்.