பொள்ளாச்சி அருகில் உள்ள கிராமத்தில் சிறுவன் குமரனுக்கு (ஆதி) மின்னல் தாக்குகிறது. இதனால் பாதிப்படையும் குமரனை சிங்கப்பூர்க்கு சிகிச்சைக்கு அனுப்புகிறார் அப்பா. பின் மீண்டும் தனது கிராமத்திற்கு திரும்புகிறான் குமரன். மின்னல் தாக்கியதால் சில அபூர்வமான சக்திகளும், பிறரின் மனதை கட்டுப்படுத்தும் ஆற்றலும் குமரனுக்கு கிடைக்கிறது.ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனம் ஊர் எல்லையில் உள்ள காவல் தெய்வமான வீரன் கோவிலை இடித்து ஆபத்தான கம்பியை பதிக்க முயற்சி செய்கிறது. குமரன் தனக்கு இருக்கும் சக்தியை பயன்படுத்தி இந்த முயற்சியை தடுக் கிறான்.ஊரில் நிகழும் அதிசியம் அனைத்தும் வீரன் சாமியால் நடப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனம் இதை கண்டறிந்து குமரனின் ஆற்றலை முறியடித்து வீரன் கோவிலை இடிக்க முயற்சிக்கிறது. இறுதியில் யார் வெற்றி பெற்றார் என்பதை பரபரப்புடனும், நகைச்சுவையுடனும் சொல்லி உள்ளார் டைரக்டர்.
படத்தின் நடுவே லாஜிக் மீறல்கள் இருந்தாலும் ரசிக்க முடிகிறது. பூசாரியாக நடிக்கும் பெரியவர் நடிப்பில் அசத்தி உள்ளார். வீரனுக்கு பொங்கல் வைக்க ஊர் மக்களிடம் அவமானப் படும் போதும், வீரன் சாமியை பார்க்கும் போது குழந்தை போல் துள்ளி குதிப்பது என பெரியவர் நன்றாக நடித்துள்ளார்.யு டுபர் சசி கோவையின் நக்கல் நையாண்டியை கண் முன் காட்டுகிறார்.முனீஸ் காந்த், காளி வெங்கட் நடிப்பை பார்க்கும் போது கவுண்டமணி,செந்தில் நினைவு வருகிறது. ஆதியின் நடிப்பில் வெற்றி வேண்டும் என்ற உழைப்பு தெரிகிறது.ஆதிரா காதல் மட்டும் செய்கிறார். வினய் ராய் யை விட பத்ரிக்கு அதிக வில்லத்தனம் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தீபக். D. மேனனின் ஒளிப்பதிவில் பொள்ளாச்சியின் குளிரும், ரம்மியமும் நன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது. லாஜிக் பற்றி கவலை படாமல் இருந்தால் மட்டுமே படத்தை ரசிக்க முடியும்.
சத்திய ஜோதி தயாரிப்பு நிறுவனம் வீரன் படத்தை தயாரித்து உள்ளது. படத்தை சரவன் இயக்கி உள்ளார்.