அஷ்டாம்ச ஆஞ்சனேயர்!

அஷ்டாம்ச ஆஞ்சனேயர்!
Published on

.எஸ்.கோவிந்தராஜன்

வாயு புத்திரரான ஆஞ்சனேயர் எட்டு விதமான சிறப்பு அம்சங்களைக் கொண்டவர் என்பதால் இவர், 'அஷ்டாம்ச ஆஞ்சனேயர்' என அழைக்கப்படுகிறார். வழிபடும் பக்தர்களுக்கு வாழ்வில் வளம் தரும் அந்த எட்டு விதமான அம்சங்கள் :

1. ஆஞ்சனேயரின் வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தைப் போக்கி, 'அஞ்சேல்' என்று அபய ஹஸ்தத்துடன் வரங்களை வாரிக் கொடுப்பது, இது முத்திரைப் பதிக்கும் ஆஞ்சனேயரின் முதல் அம்சம்.

2. மனிதர்களின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவற்றையும், வெளி எதிரிகளையும் அழிக்கக்கூடியது ஆஞ்சனேயரின் கதாயுதம். வெற்றியை மட்டுமே தரக்கூடிய இடது கையில் அனுமன் தாங்கும் கதாயுதம் இரண்டாவது சிறப்பு அம்சம்.

3. மனிதன் நோய் நொடிகள் இல்லாமல் வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை. ராமாயணத்தில் லட்சுமணன் மயங்கிக் கிடந்த நிலையில், அவரைக் காக்க ஆஞ்சனேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்ததில் ஒரு பகுதிதான் மேற்குத் தொடர்ச்சி மலை. அதில் உள்ள மூலிகைச் செடிகள் சகல வியாதிகளையும் தீர்க்கக் கூடியவை. ஆஞ்சனேயர் இந்த மலையைப் பார்த்தபடி அருள்பாலிக்கிறார்.‌ இவரை தரிசிப்பதன் மூலம் நோய் நொடியற்ற வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. மேற்கு நோக்கிய முகம் ஆஞ்சனேயரின் மூன்றாவது சிறப்பு.

4. எமதர்மராஜனின் திசை தெற்கு. ஆஞ்சனேயரின் தெற்கு நோக்கிய கால்களை வணங்குவதால் மரண பயம் நீங்கி, ஆயுள் பெருகுகிறது. இது நல்வாழ்வு தரும் ஆஞ்சனேயரின் நான்காவது சிறப்பு அம்சம்.

5. ஆஞ்சனேயரது மிகவும் சிறப்பு பெற்ற வாலில் நவக்கிரகங்களும் அடங்கியுள்ளன. அதிலும் குபேர திசையான வடக்கு நோக்கி வால் அமைந்திருப்பது ஆஞ்சனேயரின் மற்றொரு சிறப்பு. ஆஞ்சனேயரின் வாலை தரிசிக்க, குபேரனின் அருள் முழுமையாகக் கிடைக்கும். ஆஞ்சனேயரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் பிடிக்கும் என்ற பயமே தேவையில்லை. 'ஓ ராமா! உனது நாமாவையோ, இந்த அனுமனின் நாமாவையோ யார் கூறினாலும், அவர்களிடம் ஒரு நொடி கூட நான் இருக்க மாட்டேன்' என்று ஸ்ரீராமரிடம் சத்தியம் செய்துவிட்டு சனி பகவான் தனது இருப்பிடம் சென்றதாகக் கூறுவர். இது ஆஞ்சனேயரின் ஐயம் போக்கும் ஐந்தாவது சிறப்பு.

6. ஆலவாயன் சிவனின் அம்சம் ஆறாவது சிறப்பு. ராமாயணத்தில் கடவுளர்கள், தேவர்கள் என அனைவரும் ஒவ்வொரு பாத்திரம் ஏற்றனர். அதன்படி ஆலவாயனான சிவன், ராமாயணத்தில் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஆஞ்சனேயர். எனவே, அனுமனை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம் கிடையாது. ஆஞ்சனேயர் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஒப்பானது.

7. திருமலை ஏழுமலையானின் அனுக்கிரகம் பெற்றிருப்பது ஆஞ்சனேயரின் ஏழாவது சிறப்பு. ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள்பாலிப்பது போல, இங்கு ஆஞ்சனேயரின் வலது உள்ளங்கை மத்தியில் மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள். இதனால் அஷ்ட லட்சுமிகளின் அனுக்கிரகமும் பக்தர்களுக்குக் கிடைக்கிறது.

8. வெளிச்சம் தருகின்ற சூரியன் ஆஞ்சனேயரின் எட்டாவது சிறப்பு. ஆஞ்சனேயரின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும், மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி தருகிறது. ஆஞ்சனேயரின் ஜீவநேத்திரம் எட்டாவது சிறப்பு அம்சமாக விளங்குகிறது.

அனுமனின் தரிசனம், பக்தர்களின் அனைத்து தோஷங்களையும் நீக்கி, அவர்களின் வாழ்வில் அருள் மழை பொழிய வைக்கும் என்பது நிதர்சனம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com