கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!

காலையில் எழுந்ததும் முதலில் நீங்கள் கோயில் கோபுரத்தை தரிசித்தால் அந்த நாள் முழுவதும் உங்களுக்கு லாபமும், அதிர்ஷ்டமும் பெருகும் என்பது நம்பிக்கை. கோபுர தரிசனம் செய்பவர்களுக்கு கோடி புண்ணியங்கள் வந்து சேரும் என்கிறது ஆகம விதிகள்! இப்படி இருக்க, கோயில் கோபுரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பொம்மைகளுக்குப் பின்னால் இருக்கும் சூட்சுமம் உங்களுக்குத் தெரியுமா?

கோயிலுக்குச் சென்றால் முதலில் கோபுரம் வழியாக நுழைந்து பின்பு கருவறையை அடைவது வழக்கம். இப்படி கோபுரங்கள் இருக்கும் கோயில்களுக்கு அதிக சக்தி உண்டு. பெரிய பெரிய கோபுரங்கள் அமைத்து அதில் கலசங்களை வைப்பது காலா காலத்துக்கும் நிலைத்து நிற்கும் ஒரு அற்புதமான அறிவியல் ஆகும். இப்படி பார்த்துப் பார்த்து கம்பீரமாக எழுப்பப்பட்டிருக்கும் கோயில் கோபுரங்களில் இருக்கும் பொம்மைகளை என்றாவது நீங்கள் உற்று நோக்கியது உண்டா? எதற்காக கோயில் கோபுரங்கள் பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது?

கோயில் கோபுர பொம்மைகளை எப்படி வேண்டுமானாலும் அமைத்து விடக் கூடாது. எந்தந்த இடங்களில், எந்தெந்த தெய்வ உருவங்கள் இடம்பெற வேண்டுமோ, அந்த அமைப்பின்படி இருந்தால்தான் அதற்கு அதிக சக்தி உண்டு. கோபுரத்தின் மேல் பகுதியில் சிவபெருமான் தொடர்புள்ள பொம்மைகளும், நடுப்பகுதியில் விஷ்ணு பகவான் தொடர்புள்ள பொம்மைகளும், அடிப்பகுதியில் பிரம்ம தேவர் தொடர்புள்ள பொம்மைகளும் அமைக்கப்பட்டு இருக்கும். மற்ற பகுதிகளில் ரிஷிகள், பூத கணங்கள், தேவதைகள், பக்தர்கள் ஆகியோரின் உருவங்கள் அமைக்கப்பட்டு இருக்கும். இப்படி ஒவ்வொரு பொம்மைகளையும் செதுக்கும்பொழுது அதில் இலக்கண விதி உண்டு. இந்த விதிக்கு, ‘பிரதிமாலஷணம்’ என்பது பெயராகும்.

இந்த விதியின்படி கோபுர பொம்மைகள் செதுக்கப்பட வேண்டும். இதில் தெய்வ திருவுருவங்கள் அமைக்கப்படும்பொழுது அதன் கண்கள் அனுக்கிரக பார்வையுடன் சாந்தமாக அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். தெய்வத்தின் திருமுகத்தை விட, உடல் பத்து மடங்கு பெரியதாக இருக்க வேண்டும். அதுபோல மனித உருவங்கள் அமைக்கப்படும் பொழுது முகத்தைக் காட்டிலும் உடல் எட்டு மடங்கு அதிகம் இருக்க வேண்டும். தேவதைகளின் திரு உருவங்கள் முகத்தைக் காட்டிலும் ஒன்பது மடங்கு உடல் பெரியதாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். பூத கணங்கள், துவார பாலகர்கள், அசுரர்கள் ஆகியோருடைய கண்கள் உக்கிரமாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கோபுர பொம்மைகளில் இவர்கள் மட்டுமல்லாமல், தேவர்கள், பறவைகள், மிருகங்கள் கூட செதுக்கப்பட்டு இருக்கும். இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் தெய்வம் அருள்புரியும் என்பதையும், எல்லோரும் இங்கு சமம் என்பதையும் உலக மக்களுக்குப் புரிய வைக்கவே கோயில் கோபுர பொம்மைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோயிலுக்குச் செல்லும்பொழுது கட்டாயம் கோபுரத்தை தரிசனம் செய்து விட்டு வர வேண்டும். கோபுரத்தை தரிசனம் செய்த பின்பு, கோயிலுக்குள் சென்று மூலவரை வணங்க வேண்டும். பின்பு அனைத்துக் கடவுளரையும் வணங்கி விட்டு பிராகாரத்தை வலம் வர வேண்டும். அதன் பிறகு கொஞ்ச நேரமாவது அங்கு அமர்ந்து விட்டு, பின்னர் வீட்டுக்குப் புறப்படலாம். முறையாக ஒரு கோயிலை தரிசனம் செய்தவர்களுக்கு மனதில் தீய எண்ணங்கள் எழுவதற்கு வாய்ப்பே கிடையாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com