சீர்மிகு வாழ்வருளும் சித்தாத்தூர் ஸ்ரீ மாரியம்மன்!

சீர்மிகு வாழ்வருளும் சித்தாத்தூர் ஸ்ரீ மாரியம்மன்!

ம்மன் கோயில்கள் அதிகம் நிறைந்தது திருவண்ணாமலை மாவட்டம். அவற்றுள் படைவீடான ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலயம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இந்த அம்பிகையைத் தொட்டே அகிலமெங்கும் சிரசு வழிபாடு இன்றும் சிறப்புற நடைபெற்று வருகின்றது. அப்படிப்பட்ட அன்னையின் அம்சமாக சித்தாத்தூர் என்னும் திருத்தலத்தில், ‘ஸ்ரீ மாரி’ என்கிற பெயரில் அம்பிகை இன்றும் அற்புதங்கள் பலவற்றை நடத்தி வருகின்றாள்.

சித்தர்கள் பலர் வாழ்ந்த, வாழும் பூமியாக கருதப்படும் இந்த சித்தாத்தூரில் ஒரு சமயம் அன்னை ரேணுகா தேவி கோயில் கொள்ள வேண்டும் என்கிற ஆவலில் இங்கே நாகமாக உலவித் திரிந்தாள். ஒரு நாள் நாகமாக சுற்றிவந்த அம்பிகையின் நாவில் முள் தைத்துவிட்டது. அப்போது வாழைப்பந்தல் என்னும் ஊரைச் சேர்ந்த ஒரு பெரியவர் பனை மரத்தடியில் தன் மாட்டை கட்டி விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் வந்த நாகம், "நானே அன்னை ரேணுகை. நாக வடிவில் உள்ளேன். என் நாவில் முள் தைத்துவிட்டது. அதை எடுத்து விடுவாயா?" என்று கேட்க, உடனே அந்தப் பெரியவர் எந்தத் தயக்கமோ, பயமோ இல்லாமல் அந்த நாகத்தின் நாவில் இருந்த முள்ளை எடுத்துவிட்டார். படமெடுத்து ஆடிய அந்த நாகம், அவருடைய வம்சத்தையே தான் காத்தருள்வதாக வாக்களித்துவிட்டு மறைந்தது. பின்னர் அந்தப் பெரியவர் குடும்பத்தோடு இங்கே வந்து வாழ ஆரம்பித்தார். அம்மனை நினைத்து பொங்கல் வைத்து வழிபட்டார்.

நாக உருவில் முதலில் இங்கே வாழ்ந்த அன்னை ரேணுகா தேவி, பல காலத்துக்கு முன்பே கற்சிலையாக மண்ணுள் புதையுண்டு கிடந்தாள். வயலில் ஏர் உழும்போது ஏர் கலப்பையில் தட்டுப்பட்டு, வெளியே கொண்டுவரப்பட்டாள். அதுமுதல் அவளிடம் சரணடைந்தோரது வாழ்வில் சாதனைகள் பலவற்றைப் புரிந்து வருகின்றாள். பெங்களூரில் வசிக்கும் அந்தப் பெரியவரின் வம்சாவளியினர் இன்றும் இங்கு வரும்போது அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டு, குறைவின்றி வாழ்கின்றனர்.

தமிழகமெங்கும் பலருக்கும் குலதெய்வமாக இந்த அன்னை திகழ்கின்றாள். தம் குலதெய்வம் எதுவென்று அறியாத பலரது கனவில் இந்த ஸ்ரீ மாரி தோன்றி, சித்தாத்தூர் வரும்படி கூறி மறைகின்றாள். அதனால் இன்றும் சில பக்தர்கள் தன் குலதெய்வமான இந்த அம்மனை கண்டுபிடித்துவிட்டதாகக் கூறி மெய் சிலிர்க்கின்றனர். கண்ணீர் மல்க அம்மனை வழிபட்டு ஆனந்தம் அடைகின்றனர்.

ஊர் எல்லையில் வயல் வெளிகளின் நடுவே அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறாள் அன்னை. ஒரே திருச்சுற்றினைக் கொண்டு தனி விமானத்துடன் திகழ்கின்றது ஆலயம். கருவறையில் சுதை வடிவில் அமர்ந்த அம்மனையும், கீழே மூன்று சிரசு அம்மனையும் கண்டு வணங்கலாம். இவற்றில் வலப்புறம் இருப்பது வயல்வெளியில் கிடைத்த அம்மனாகும். ஆகாய சக்தியெல்லாம் இங்கே ஒன்றுகூட, பார்வதி சொரூபமாக அருள்மழை பொழிகின்றாள் ஸ்ரீ மாரியம்மன். சித்தர்கள் பலர் இன்றும் இங்கு வந்து இரவில் அம்மனை வழிபடுவதாக பலர் நம்புகின்றனர். இவளை எட்டியம்மன் என்றும் அழைக்கின்றனர்.

எண்ணற்றோர் வாழ்வில் அற்புதங்களையும், திருப்பங்களையும் நிகழ்த்தும் இந்த அம்மனுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் மிகவும் விமரிசையாக திருவிழா எடுக்கின்றனர். தைப்பொங்கல் அன்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடக்கின்றன. பிரதி மாத பௌர்ணமிதோறும் இங்கு அம்மனுக்கு சிறப்பு யாகங்கள் நடத்தி அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

இங்குள்ள கிணற்று நீர் மருத்துவ குணம் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த அன்னை கனவில் தோன்றி பொங்கல் வழிபாடு செய்யும்படி கூறியும், அதை அலட்சியப்படுத்தினால் பாம்பாகத் தோன்றி அறிவுறுத்துவாளாம். உடனே அவர்கள் சித்தாத்தூர் வந்து, அன்னையை வணங்கி, பொங்கல் வைத்து வழிபடுவார்களாம். இது இன்றும் நடைமுறையில் நடக்கின்றது. அற்புதங்கள் பல நிகழ்த்தி பக்தர் வாழ்வில் வளம் பெருக வைக்கும் இந்த ஸ்ரீ மாரியம்மனை சரணடைந்து, வாழ்வில் பல வரங்களைப் பெற்று உயர்வோம்.

அமைவிடம்: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இருந்து வந்தவாசி செல்லும் பேருந்து சாலையில் ஆரணியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

தரிசன நேரம்: காலை 7 முதல் 11 மணி வரை. மாலை 5 முதல் 7 மணி வரை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com