பர்மிங்ஹாம் வெங்கடேஸ்வரா ஆலயத்தில் வைகாசி உற்சவம்!

பர்மிங்ஹாம் வெங்கடேஸ்வரா ஆலயத்தில் வைகாசி உற்சவம்!

லண்டனிலிருந்து கோமதி.

பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால்,
புன்மை யிருட்கணம் போயின யாவும்;
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;

-என்ற பாரதியின் வரிகளை நினைவு கூறும் விதமாக, கொரோனா என்னும் காரிருளிருந்து விடுபட்டு விடியல் வந்ததை உறுதிப்படுத்தும் விதமாக இங்கிலாந்தில் கடந்த மே மாதம் 20 முதல் 22-ம் தேதி வரை "I for India" என்னும் அமைப்பின் மூலம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது வைகாசி உற்சவம்! மாபெரும் நிகழ்வாக இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பலரும் பங்கு பெற்ற இந்த வைபவம், இங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் ஒரு புது உத்வேகத்தை உருவாக்கியது என்றே கூறலாம்.

திரு. துஷ்யந்த் ஸ்ரீதர் மற்றும் திரு. ராகுல் வெல்லால் பங்கு பெறுவதாக இவ்விழாவைப் பற்றிய அறிவிப்பு வந்த ஒரு சில நாட்களிலேயே விழாவிற்கான நுழைவுச் சீட்டுக்கள்  அனைத்தும் விற்கப்பட்டு விட்டன.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழா 20-ஆம் தேதியன்று லண்டனில் அமைந்துள்ள "தி பவன்" என்னும் அரங்கில் பிரமாண்டமாக துவங்கியது. இந்திய கலாச்சாரம் சார்ந்த அனைத்து நிகழ்வுகளும் இங்கு நடைபெறுவது தனி சிறப்பு வாய்ந்ததாகவும், மதிப்பு மிக்கதாகவும் கருதப்படும். கர்னாடக இசைக் கலைஞர்கள் அருணா சாய்ராம், ரஞ்சனி காயத்ரி சகோதரிகள், ஹிந்துஸ்தானி பாடகி கௌஷிகி சக்ரபோர்த்தி என பல்வேறு கலைஞர்களை கௌரவித்த பெருமை இந்த அரங்கிற்கு உண்டு. இது மட்டுமின்றி பரதநாட்டியம், ஒடிசி, குச்சிப்பிடி என பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், யோகா சார்ந்த கருத்தரங்குகள், கர்நாடக சங்கீதம் மற்றும் நாட்டியம் சார்ந்த வகுப்புகள் இங்கு நடைபெறுவது கூடுதல் சிறப்பு.

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த "தி பவனில்" திரு.துஷ்யந்த் ஸ்ரீதர்  விஷ்ணு சஹஸ்ரநாமம் பற்றிய உரை நிகழ்த்தி, அரங்கில்  குழுமி இருந்த அனைவரையும் பக்தி கடலில் ஆழ்த்தினார்.

மேலும் ராகுல் வெல்லாலின் காந்தக் குரலும், இசை ஞானமும் அங்கிருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது என்றால் மிகையில்லை. விழா முடிந்தவுடன் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி கலைஞர்களை வாழ்த்தி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

றுதினம் 21-ம் தேதி மெய்டன்ஹெட் என்னும் இடத்தில் விழா களைகட்ட துவங்கியது. மக்கள் வெள்ளம் எனக் கூறும் அளவிற்கு பெருந்திரளான கூட்டம், சிறுவர், சிறுமியர் அரங்கம் முழுக்க நிறைந்திருந்தனர். .துஷ்யந்த் ஸ்ரீதர் "திரௌபதி" என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தி அனைவரையும் ஆச்சரிய கடலில் ஆழ்த்தினார். .ராகுல் வெல்லாலின்  இனிமையான இசையை  அங்கிருந்த அனைவரும் தங்களை மெய்மறந்து ரசித்தனர்.

றுதி நாளான 22-ம் தேதியன்று பர்மிங்கம் நகரில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயத்தில் நடைபெற்ற விழாவை சற்று விரிவாக இப்போது காண்போம். இங்கிலாந்திற்கு சுற்றுலா வருவோர் கண்டிப்பாக காணும் இடங்களில் இதுவும் ஒன்று. இங்கிலாந்தில் வாழும் இந்தியர்கள் அடிக்கடி சென்று தரிசிப்பது  " பர்மிங்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா" ஆலயம் ஆகும்.  திருப்பதிக்கு இணையாக போற்றப்படும் இக்கோவிலின் லட்டு பிரசாதம் மிகப் பிரபலம். இக்கோயிலுக்கு  எப்பொழுது சென்றாலும் லட்டு பிரசாதம் வழங்கப்படும். இப்படி இக்கோயிலின் சிறப்பம்சங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

வைகாசி உற்சவம் விழா குறித்த நேரத்தில் பர்மிங்கம் நடனக்குழுவின் பாரதநாட்டியத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து "இந்தியா ஐலண்ட் அகாடமி" என்னும் தன்னார்வக்குழுவை சார்ந்த சிறுவர் சிறுமியர் "கஜேந்திர மோக்ஷம்" மற்றும் "பகவத் கீதை" அத்தியாயம் 12-ன் ஸ்லோகங்களை மனனம் செய்து ஒப்புவித்து அனைவர் பாராட்டையும் பெற்றனர். அதையடுத்து சிறுவர் சிறுமியினரின் கர்நாடக இசை நிகழ்ச்சி முடிந்ததும் திரு. துஷ்யந்த் ஸ்ரீதரின் உரை துவங்கியது.

"கஜேந்திர மோக்ஷம்" என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய உரை அருமையிலும் அருமை. தெலுங்கு கன்னடம் , மலையாளம் என பல்வேறு மொழி மக்களையும் கவரும் விதமாக திரு.துஷ்யந்த் ஸ்ரீதர்  ஆற்றிய உரை அவரின் மொழி ஆளுமையை தெளிவாக எடுத்துக் கூறும் வகையில் அமைந்திருந்தது.சனாதன தர்மத்தின் சிறப்பு, இறைவனை சென்றடையும் வழி என பல தத்துவங்களை கேட்போருக்கு எளிதில் விளங்கும் வகையில் அவர் விளக்கியது விழாவின் முத்தாய்ப்பாக அமைந்தது.

இந்திரத்தியும்னன் என்னும் அரசன் சபிக்கப்பட்டு கஜேந்திரனாக பிறந்தது, ஹுஹு என்னும் கந்தர்வன் முதலையாக பிறந்து பின் இருவரும் சாப விமோசனம் பெற்ற கதை மற்றும் ஆதி சங்கரர் பாடிய "புனரபி மரணம் புனரபி ஜனனம்" என்னும் கூற்றோடு இக்கதையை ஒப்பிட்டுக் கூறிய விதம் மிக அருமை.

இதை தொடர்ந்து அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ராகுல் வெல்லால் கச்சேரி தொடங்கியது. பதின்ம வயது சிறுவனாக, குரல் உடைந்து கம்பீரமான அதே நேரத்தில் மென்மை தன்மையுடனும் அவர் பாடியது, கேட்போரின் காதில் தேன் வார்த்தது. அருணாச்சல கவியின் "கண்டேன் சீதையை" என்னும் கீர்த்தனையை வசந்தா ராகத்தில் அவர் பாடியதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. ராமனின் அழகை வர்ணிக்க எவ்வாறு கம்பன் திணறினானோ,

வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய

பொய்யோ எனும் இடையாளோடும் இளையானோடும் போனான்

மையோ மரகதமோ மறி கடலோ மழை முகிலோ

ஐயோ இவன் வடிவென்பது ஓர் அழியா அழகுடையான்

அதை போன்றே திரு.ராகுல் வெல்லாலின் இசைத்திறனை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

விழா இனிதே நிறைவு பெற்று, திரு.துஷ்யந்த் ஸ்ரீதர் கல்கிக்கு அளித்த பிரத்தியேகமான பேட்டியில் , இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்த விழா அருமையாக நடந்தேறியதையும், இந்த பூமியில் எப்பொழுதும் அன்பும் அமைதியும் நிறைந்து திகழும் என்றும் வாழ்த்தி விடைபெற்றார்.

அங்கு வந்திருந்த அனைவரும் அதே மனநிறைவோடு விடை பெற்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com