அனுமன் வாலில் ஐக்கியமாகும் நவ கிரகங்கள்!

அனுமன் வாலில் ஐக்கியமாகும்
நவ கிரகங்கள்!

* கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் ஸ்ரீராமர் சன்னிதி முன்பு அனுமன் சிலை உள்ளது. ‌அவரது உயரம் 22 அடி. இவர் ‌எப்போதும் வெண்ணெய்க் காப்பில் காட்சி தருவார். இவருக்கு சாற்றும் வடை மாலை நீண்ட நாட்களுக்குக் கெட்டுப்போவதில்லை. கூப்பிய கரங்களுடன் காட்சி தரும் இந்த விஸ்வரூப திருக்கோலம், அசோகவனத்தில் சீதை இருந்தபோது காட்டியதாம்.

* புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூரில் உள்ள அழகியபெருமாள் கோயிலின் வட திசையில் அனுமன் சன்னிதி உள்ளது. இவரை கல்யாண அனுமனாகக் கொண்டாடுகிறார்கள் பக்தர்கள். ஏனெனில், திருமணத் தடை உள்ளவர்கள் இவருக்கு ரோஜா பூ மாலை சூட்டி வேண்டிக்கொண்டால், விரைவில் திருமணம் நடைபெறுவதாக நம்பிக்கை.

* கர்நாடக மாநிலம், ஹூப்ளியில் உள்ள மாருதி கஜானன் கோயிலில் அனுமனுக்கும், விநாயகருக்கும் முதல் நாள் சூட்டப்படும் பூ மாலையை உதிர்த்து, பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குகிறார்கள்.

* திண்டுக்கல் மாவட்டம், அணைப்பட்டியில் உள்ள வீர ஆஞ்சனேயர் கோயிலில் நவ கிரகங்கள் வாயு வடிவில் உள்ளன. அனுமனின் வாலில் நவ கிரகங்கள் ஐக்கியமானவை என்பதால், நவ கிரகங்களுக்கு இங்கு தனியாக சன்னியோ சிலைகளோ இல்லை.

* தாய்லாந்தில் உள்ள புகழ் பெற்ற பீமாய் கோயிலிலும், ஜாவாவில் உள்ள பிரம்பானம் கோயிலிலும், கம்போடியாவில் உள்ள கோயில்களிலும் ஆஞ்சனேயர் சிலைகள் உள்ளன.

* அங்கோலா பண்டேஸ்ரி கோயிலின் நுழைவு வாயிலில் அனுமன் சிலை காட்சி தருகிறது.

* அயோத்தியில் உள்ள அனுமன் மந்திரில் பக்தர்களுக்கு லட்டு நிவேதனமே பிரசாதமாக வழங்கப்படுகிறது.

* கர்நாடக மாநிலம், ஹூப்ளி ரயில்வே ஸ்டேஷன் ரோடில் உள்ள அனுமன் கோயிலில் பக்தர்கள் உடைக்கும் தேங்காய் நீரையும், வில்லைகளையுமே அனைவருக்கும் பிரசாதமாக வழங்குகின்றனர்.

* தெலங்கானா மாநிலம், செகந்திராபாத் ரயில் நிலையம் அருகில் உள்ள அனுமன் கோயிலில் பத்து கரங்களுடன் அனுமன் காட்சி தருகிறார். அதோடு, இவர் வராகர், கருடர், ஆஞ்சனேயர், நரசிம்மர், ஹயக்ரீவர் என ஐந்து முகங்கள் கொண்ட பஞ்சமுக ஆஞ்சனேயராகவும் விளங்குகிறார். மேலும், கோயில் கர்ப்பக்கிரகத்தில் சஞ்சீவி மலையையும், கதையையும் கைகளில் தாங்கி, வீர ஆஞ்சனேயராக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com