சிதம்பரமும் ரகசியங்களும்!

சிதம்பரமும் ரகசியங்களும்!

‘சிதம்பர ரகசியம்’ என்றால் என்ன என்பதைக்கூட தெரிந்து வைத்திருப்பீர்கள். நடராஜரின் வலது புறத்திலுள்ள மறைவிடத்தில் தங்க வில்வமாலை தொங்கவிடப் பட்டிருக்கும். இதை விலக்கிப் பார்த்தால் ஆகாயம் தெரியும். இறைவன் இத்தலத்தில் ஆகாய வடிவமாக இருக்கிறான் என்பதே சிதம்பர ரகசியம். ஆனால், ‘உடுக்கை ரகசியம்’ என்றால் என்ன தெரியுமா? திருவாதிரை நாயகர் நடராஜர் உடுக்கையை கையிலெடுத்து நடனமிடுகிறார். இந்த இசைக்கருவியில் ஏழு ஸ்வரங்களும் எழும். வீணை கூட இதற்கு அடுத்த நிலையைத்தான் பெறும். இதன் தத்துவம், ஏழு ஸ்வரமும் இணைந்தால்தான் பூரண நாத இன்பம் கிடைக்கும். பூரணமான நாதத்தின் மூலலே இறைவனை அடைய முடியும் என்பதே. ஆகவேதான், தன்னை அடையும் வழியை உடுக்கையை கையில் எடுத்து 'குறிப்பால்' உணர்த்துகிறார் நடராஜப் பெருமான்.

நடனத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று மகிழ்ச்சி தருவது, மற்றொன்று பயம் தருவது. முதலாவது வகை பரதம், கதகளி, ஒடிசி, குச்சுப்புடி போன்ற பயிற்சி பெற்ற நடனங்கள். இறைவனை மறக்காமல், அவனுக்கு அடங்கி, நல்ல செயல்களையே செய்யும் வகையில் நடராஜரை கண்ணுக்கு விருந்தளிக்கும் தெய்வமாகக் காணலாம். ஆனால், ஒழுக்கம் தவறி உலகம் செல்லும்போது, நடராஜர் ருத்ரனாக மாறி ருத்ர தாண்டவம் ஆடுகிறார். அப்போது பூமி குலுங்கும். பூகம்பம் ஏற்படும். கடல் கொந்தளிக்கும். இது இறைவன் விடுக்கும் எச்சரிக்கை. இந்த எச்சரிக்கைக்கும் கட்டுப்படவில்லை என்றால், உலகம் ஆட்டம் போடத் துவங்கிவிடும்.

பரத நாட்டியக் கலைஞர்கள் 108 கரணங்கள் கற்பார்கள். இந்த 108 கரணங்களும் சிதம்பரம் கோயில் கோபுரத்தில் உள்ளன. பழம்பெரும் கோயிலான தஞ்சை பெரிய கோயில் சிற்பக்கலையில் மிகச்சிறப்புடையதாயினும் இக்கோயிலில் 84 கரணங்கள்தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சிதம்பரம் ஆடலரசன் கோயில் என்பதால், இங்கு பரதக் கலையின் சகல நுட்பங்களையும் சிற்பிகள் வடித்துள்ளனர்.

டராஜர் ஐந்து வகை தொழில்களைச் செய்பவர். பிரம்மாவின் படைக்கும் தொழிலை அவரது கையிலுள்ள உடுக்கை குறிக்கிறது. விஷ்ணுவின் காக்கும் தொழிலை அவரது அபயக்கரம் செய்கிறது. ருத்ரனின் அழிக்கும் தொழிலை அவரது கையிலுள்ள நெருப்பு சொல்கிறது. மகேஸ்வரனின் மறைத்தல் (பாவங்களைப் பொறுத்தல்) தொழில் அவர் முயலகன் என்ற அரக்கனை தனது காலில் வைத்திருப்பதில் இருந்து தெரிகிறது. சதாசிவனின் அருள்புரியும் தன்மையை அவரது தூக்கிய காலும், அதை நோக்கி இடக்கரம் நீண்டுள்ளதும் குறிக்கிறது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிலைகளுக்கு கோயிலின் சித்சபை அருகிலுள்ள, 'பரமானந்த கூபம்' என்ற கிணற்று நீரே அபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கிணற்றில் ஐப்பசி வளர்பிறை நவமி திதியன்று, கங்கா தேவி நீராட வருவதாக ஐதீகம். எனவே, இந்தக் கிணற்றை புனிதத் தீர்த்தமாகக் கருதி பக்தர்கள் நீராடுகின்றனர்.

கோயிலில் பூஜை செய்வதே பக்தர்கள் பகவானைக் கண்குளிரக் கண்டு தரிசிக்கத்தான். ஆனால், யாராலும் பார்க்க முடியாத, 'ரகசிய பூஜை' சிதம்பரம் கோயிலில் இரவு 7-8மணிக்குள் நடத்தப்படும். இறைவன் அருவமாக அல்லது ஆகாய வடிவமாக காட்சியளிக்கும், 'சிதம்பர ரகசியத்துக்கு' இந்த நேரத்தில் பூஜை நடத்தப்படும். இரண்டு அர்ச்சகர்கள் மட்டும் ரகசியப் பகுதிக்குள் சென்று, கதவுகளை மூடிய பிறகு பூஜை செய்வர். இதைப் பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com