இந்து மத சம்பிரதாயங்கள் மூட நம்பிக்கையா?

இந்து மத சம்பிரதாயங்கள் மூட நம்பிக்கையா?

ந்து மதம் என்பது உலகத்தில் உள்ள விஞ்ஞான வடிவிலான மதங்களில் ஒன்றாகும். அதன் வழக்கங்களும் மரபுகளும் காரண, காரியத் தொடர்புடையவை. விஞ்ஞான காரணங்களை அதன் பின் அது வைத்திருக்கும். ஒவ்வொரு சடங்குகளும் நாம் நலமுடன் இருப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை. பழங்கால மரபுகளுக்குப் பின்னால் உள்ள அற்புதமான அந்த விஞ்ஞான காரணங்கள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியான சில இந்து மத சம்பிரதாயங்கள் பற்றியும் அவற்றின் தத்வார்த்தத்தைப் பற்றியும் காண்போம்.

நமஸ்காரம்: நமஸ்காரம் செய்வது இந்தியர்களின் வழக்கம். பொதுவாக, இதை மற்றவர்களுக்கு அளிக்கும் மரியாதையாகத்தான் பார்க்கின்றனர். ஆனால், நமஸ்காரம் செய்கையில், இரண்டு கைகளையும் ஒன்று சேர்க்கும் போது உங்களின் விரல் நுனிகள் அனைத்தும் ஒன்று சேரும். அவற்றை ஒன்றாக அழுத்தும்போது ப்ரெஷர் புள்ளிகள் செயல்படத் தொடங்கும். இதனால் அந்த நபரை நீண்ட நாட்கள் மறக்காமல் இருக்கச் செய்யும்.

பொட்டு வைத்தல்: ஒவ்வொரு பெண்ணும் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வது வழக்கம். நெற்றியில்தான் ஆக்னேய சக்கரம் இருப்பதாகக் கூறப்படுகிறது. நெற்றியில் பொட்டு வைக்கும்போது இந்தச் சக்கரம் தானாக செயல்படத் தொடங்கி விடும். இது உடலில் உள்ள ஆற்றல் திறனை இழக்க விடாமல் செய்யும். மேலும், புத்தி ஒருமுனைப்படுதலை மேம்படுத்தும் என்று அறிவியல் ரீதியாகச் சொல்லப்படுகிறது. சிந்து சமவெளி காலத்திலிருந்தே பெண்கள் குங்குமத்தை தங்கள் நெற்றியில் சூடிக்கொள்வதாக ஒருசில குறிப்புகள் உள்ளன.

மெட்டி அணிதல்: திருமணமான இந்து பெண்கள் மெட்டி அணிவது வாடிக்கையான ஒன்று. அது வெறும் அலங்காரத்துக்கு மட்டுமில்லை. பெண்களின் உடல் ஆரோக்கியத்துக்காக. பொதுவாக, பெருவிரலுக்கு அடுத்த விரலில்தான் பெண்கள் மெட்டி அணிவார்கள். இந்த விரலில் இருந்து செல்லும் நரம்பு கர்ப்பப்பை மற்றும் இதயத்துக்கு நேரடியாகச் செல்கிறது. இரண்டாம் விரலில் மெட்டி அணிவதால் கர்ப்பப்பை வலுவடைந்து, இரத்த ஓட்டம் சீராக உதவும்.

கோயில் மணிகள்: கோயில் மணிகள் சாதாரண உலோகத்தில் செய்யப்படுவதில்லை. காட்மியம், ஜின்க், லெட், காப்பர், நிக்கல், க்ரோமியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற பல உலோகங்களைக் கொண்டு செய்யப்படுபவை. இந்த மணியை ஒலிக்கச் செய்யும்போது ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு தனித்துவமான ஒலியை எழுப்பும். இது உங்கள் இடது மற்றும் வலது மூளையை இணைக்கச் செய்ய உதவுகிறது. கூர்மையான இந்த சத்தம் எழு நொடிகள் வரை நீடிக்கும். மணியில் இருந்து எழும் எதிரொலி உங்கள் உடலில் உள்ள ஏழு மையங்களையும் (சக்கரங்கள்) தொடும். அதனால் மணி ஒலித்த உடனேயே, உங்கள் மூளை சில வினாடிகளுக்கு வெறுமையாகி விடும். அப்போது மெய்மறதி நிலையை அடைவீர்கள். இந்த மெய்மறதி நிலையில், உங்கள் மூளை சொல்வதை வரவேற்கும் பண்பை பெறுவதாக அறிவியல் கூறுகிறது.

துளசியை வழிபடுதல்: இந்தியாவில் உள்ள பெரும்பாலான இந்துக்களின் வீடுகளில் துளசி செடியுடன் கூடிய மாடம் இருக்கும். அதனை தினசரி வழிபடுவார்கள். அதற்கு காரணம், துளசியில் உள்ள கபம் பிரச்னையைப் போக்குதல், ரத்த சுத்திகரிப்பு போன்ற உயர்ந்த மருத்துவ குணங்கள். துளசி செடியின் மகத்துவத்தைப் புரிந்து கொண்ட பழங்கால முனிவர்கள், அது அழிந்து விடாமல் காப்பதற்காக அதனை வழிபடும் சடங்கை உண்டாக்கினார்கள். துளசி பெருமளவு ஆக்ஸிஜனை வெளிப்படுத்துவதால் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது

அரசமரம்: அரசன் என்றால் ராஜா (முதன்மையானவர்). காற்றில் உள்ள மாசை குறைத்து, ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்துவதில் இதுதான் முதன்மையானது. ஒரு அரச மரமானது ஒரு கிலோமீட்டர் பரப்பளவு உள்ள ஆக்சிஜனை சுத்தப்படுத்த வல்லது என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவேதான், இது அரசமரம் என அழைக்கப்படுகிறது. பொதுவாக, அரசமரத்தோடு விநாயகர் சிலையும் பிரதிஷ்டை செய்து சுற்றும் அறிவியலும் இதுவே. ஆனால், இரவு நேரத்தில் அரச மரத்தை சுற்றக்கூடாது. அதனால், இந்த மரத்தை பாதுகாப்பாக வைத்திடவே அதை புனித மரமாகக் கருதுகின்றனர்.

உணவுக்குப் பின் இனிப்பு உண்ணுது: இந்தியாவில் காரசாரமான பதார்த்தங்களோடு ஆரம்பிக்கும் உணவு, இனிப்புப் பண்டங்களுடன் முடிவடையும். அதற்குக் காரணம் செரிமான அமைப்பு மற்றும் அமிலங்களை செயல்படுத்த செய்வது காரசாரமான உணவுகள். இந்த செயற்பாட்டை குறைத்திடும் இனிப்புகள். அதனால் உணவருந்திய பிறகு இனிப்புகள் உண்ண பரிந்துரைக்கப்படுகிறது.

கைகளில் மருதாணி வைப்பது: அலங்கார காரணத்தைத் தவிர, மருதாணி என்பது சக்தி வாய்ந்த மருத்துவ மூலிகையாகும். திருமணம் என்பது பெண்களைப் பொறுத்தவரை மன அழுத்தத்தை உண்டாக்கும். குறிப்பாக, மணப்பெண்ணுக்கு, மருதாணி தடவிக் கொண்டால், அது நரம்புகளைக் குளிரச் செய்யும். அதனால்தான் மணப்பெண்ணின் கைகளிலும் கால்களிலும் மருதாணி தடவப்படுகிறது. அதோடு, ஆரம்ப நிலையில் உள்ள மனநோயை (புத்திசுவாதினத்தை) வராமல் தடுக்கும் ஆற்றல் மருதாணிக்கு உண்டு.

தரையில் அமர்ந்து உண்ணுவது: நாம் தரையில் அமரும்போது சுகாசன் தோரணையில் அமர்கிறோம். இந்த தோரணை செரிமானத்தை மேம்படுத்தும். வயிறு அழுத்தப்படுவதால் அதிகப்படியாக உணவு உண்பதை இது தவிர்க்கும்.

காலையில் சூரியன் வழிபாடு: விடியற்காலையில் சூரிய பகவானை வணங்கும் வழக்கம் இந்துக்களிடம் உள்ளது. அதற்குக் காரணம், விடியற்காலையில் வரும் சூரிய ஒளிகள் கண்களுக்கு மிகவும் நல்லதாகும். மேலும், காலையில் விரைவாக எழுந்திருப்பது உடலுக்கு ஆரோக்கியமானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com