‘தன் வினை தன்னைச் சுடும்’

‘தன் வினை தன்னைச் சுடும்’

சிவபெருமானிடம் கோடிக்கணக்கான தனுசுகள், அதாவது வில்கள் உண்டு. இவை அனைத்தையுமே ‘சிவ தனுசு’ என்றே கூறுகின்றோம். மக்களின் சிற்றறிவுக்குத் தெரிந்த வரை சிவபெருமான் தன்னிடம் உள்ள மூன்று சிவ தனுசுகளைச் சிவப் பிரசாதமாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் மற்றவர்க்கு அளித்துள்ளார். அதில் ஒன்று ராவணனுடைய தவத்தை மெச்சி அவனுக்கு அளிக்கப்பட்டது.

சிவபெருமானே வழங்கிய வில் என்றால் அதன் மகிமை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும் அல்லவா? சிவ தனுசுவை வைத்திருக்கும் ஒருவனை எந்த உலகத்திலும், யாராலும் வெல்ல முடியாது. ஆனால், இந்த வில்லை முறையாகப் பயன்படுத்தும் வரைதான் அது சிவப் பிரசாதமாக இருக்கும். அதைத் தவறாகப் பயன்படுத்தினால் அது தன் சக்தியை இழந்து விடும். இதை பூரணமாக உணர்ந்தவன்தான் ராவணன். ஆனால், தான் என்ற அகங்காரம் காரணமாக சிவ வாக்கை மறந்து எல்லா லோகங்களுக்கும் சென்று, தேவர்கள், கந்தர்வர்கள் என அனைவரையும் வென்றான். நவ கிரக லோகங்களுக்கும் சென்று அனைத்து நவ கிரகங்களையும் தன் அடிமையாக்கி தனது சிம்மாசனப் படிகளாக்கி அவர்களை அவமானப்படுத்தினான்.

இத்தகைய அதர்மமான செயல்களால் சிவ தனுசுவின் சக்தி சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது. அனைத்து லோகங்களையும் வென்ற ராவணன், கடைசியில் பிரம்ம லோகத்துக்கும் சென்றான். பிரம்மாவையும் வென்று தனது அடிமையாக்க வேண்டும் என்பது அவன் விருப்பம். பிரம்ம லோகம் சென்ற ராவணனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ராவணனின் தவறான செய்கைகளால் தனது சக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வந்த சிவ தனுசு, பிரம்ம லோகத்தை அடைந்தவுடன் முழுவதுமாக தனது சக்தியை இழந்து விட்டது.

இதைச் சற்றும் எதிர்பாராத ராவணன் செய்வதறியாது திகைத்தான். பிரம்மாவை எதிர்க்க முடியாமல் வெட்கம் அடைந்து தலை குனிந்தான். தனது செய்கையால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை நினைந்து வருந்தி உடனடியாகத் தனது சொந்த அரக்க லோகத்துக்கு வெறுங்கையுடன் திரும்பினான். அதோடு, ‘இனி சிவ தனுசுவால் என்ன பயன்?’ என்று எண்ணி அதைத் தூக்கி எறிந்து விட்டான். இதைப் பார்த்த ஜனக மகாராஜா, இதன் மகத்துவத்தை ராவணன் அறியவில்லையே என்று வருந்தி, அந்த சிவ தனுசுவை தானே எடுத்து வந்து அதற்கு தினமும் அனைத்து விதமான அபிஷேக ஆராதனைகளையும் பூஜைகளையும் செய்து வந்தார்.

காலச் சக்கரம் சுழன்றது… குழந்தை பாக்கியம் இல்லாததால் சீதையை பூமியின் மடியில் கண்டெடுத்து தனது மகளாக ஜனகர் வளர்த்து வந்தார். சீதை சிறுமியாக இருந்தபோது ஒரு நாள் தனது தோழிகளுடன் பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அந்தப் பந்து உருண்டு ஓடி சிவ தனுசுவின் கீழ் மறைந்து விட்டது. பந்தைத் தேடி வந்த சீதை, தனது இடது கையால் சிவ தனுசுவைச் சாதாணமாக தூக்கிப் பிடித்துக் கொண்டு வலது கையால் பந்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டாள்.

இதைக் கண்ட ஜனக மகராஜாவுக்கு ஆச்சரியம். ஏனென்றால், அந்த சிவ தனுசுவை 10,000 வீர மல்லர்கள் சேர்ந்தால்தான் நகர்த்தவே முடியும். ஆனால், இந்தக் குழந்தை அலட்சியமாக இடது கையால் தூக்கி விட்டதே. அவரால் தனது கண்களையே நம்ப முடியவில்லை. அதேசமயத்தில் இன்னொரு வருத்தமும் அவருக்கு ஏற்பட்டது. ‘இந்தப் பராக்கிரமம் பொருந்திய கன்னியை எவருக்கு மணம் முடிப்பது? இவளுக்கே இவ்வளவு ஆன்மிக பலம் இருந்தால் இந்தச் சிறுமியை மணக்கும் வீரன் எத்தகைய பராக்கிரமசாலியாக இருக்க வேண்டும்? உண்மையில் அப்படி ஒருவன் ஈரேழு உலகத்திலும் இருக்கிறானா?’ என்பதே சந்தேகம். இருந்தாலும் எப்படி, எங்கே அவனைத் தேடுவது? இப்படிப் பல்வேறு சிந்தனைகளிடையே உழன்றார் ஜனக மகாராஜா.

களுக்கு திருமண வயது வந்தவுடன் தகுந்த மணவாளணைத் தேர்ந்தெடுப்பது என்று ஆலோசித்தார். ஒவ்வொருவரும் தங்களுக்குத் தோன்றிய அற்புதமான யோசனைகளைக் கூறினர். இறுதியில் சிவ தனுசுவை நாணேற்றி உடைப்பவருக்கே சீதா தேவி மனைவி ஆவாள் என்று அறிவித்தார். அதன் பிறகு நடந்தவை அனைவருக்கும் தெரியும். ஸ்ரீராமர் சிவ தனுசுவில் நாணேற்றி உடைத்துவிட்டார். அதன் பிறகு அவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது.

தன் பின்னர் முறிந்த அந்த சிவ தனுசு என்னவாயிற்று? என்பதனைப் பற்றிக் காண்போம். நாம் நினைப்பது போல சிவ தனுசு என்பது சண்டைக்காகப் பயன்படுத்தக்கூடிய ஒரு வில் மட்டுமன்று. சிவ தனுசு சிவபெருமானுடைய திரண்ட சக்தியின் ஒரு கூறு. சிவ தனுசுவில் ஆயிரக்கணக்கான தனுர் வேத தேவதைகளும் தெய்வங்களும் ரிஷிகளும் முனிவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம்.

தனுசு முறிந்ததால் அனைத்து தெய்வ சக்திகளும் வெளிவந்து தாங்கள் எங்குச் செல்வது என்று தெரியாமல் திகைத்தன. பிறகு எல்லோரும் ஜனக மகாராஜாவை வணங்கி, “சுவாமி பன்னெடுங்காலமாக நாங்கள் இந்த சிவ தனுசுவில் குடி கொண்டுள்ளோம். இப்போது இந்த தனுசு முறிந்து விட்டால் நாங்கள் எங்கே செல்வது? எங்களுக்கு சாத்வீகமாக எதிலும் ஈடுபட முடியாது. தனுர் வேதத்தில் லயித்துள்ள எங்களுக்கு வீரம், சண்டை இவற்றில்தான் மனம் ஈடுபடும். எனவே, தாங்களே இதற்கு ஒரு நல்ல வழியைக் கூற வேண்டும்” என்றவுடன் ஜனகர் சிந்தனையில் ஆழ்ந்தார்.

பின்னர் சிவ தனுசுவிலிருந்து வெளிவந்த அனைத்து தேவ, தெய்வ சக்திகளையும் 1008 அஸ்திரங்களில் ஆவாஹணம் செய்தார். அந்த 1008 அம்புகளையும் ராமபிரானுக்கே வெற்றிப் பரிசாக அளித்து விட்டார். அந்த தனுர் வேத சக்திகளும் ராமபிரானுடைய அம்பாரத் துணியிலேயே குடிகொண்டு ராமருக்கு உறுதுணையாக நின்றன.

இலங்கையில் ராவணனுக்கு எதிராக நடந்த யுத்தத்தில் ராவணனின் உடலைத் துளைத்து அவனை பரலோகத்துக்கு அனுப்பியதும் இந்த 1008 அஸ்திர சக்திகளே. ராவணன் சிவ தனுசுவை முறையாகப் பயன்படுத்தாது, யாரை எல்லாம் அதர்மமாகத் துன்புறத்தினானோ அவர்களுடைய சாபங்களே சிவ தனுசு அஸ்திரங்களாக மாறி அவனது உயிரைக் கவர்ந்தன. உண்மையில் ஸ்ரீராமர், ராவணனைக் கொல்லவில்லை. ராவணனுடைய தீவினைகளே அவன் உயிரைக் கவர்ந்தன. ‘தன் வினை தன்னைச் சுடும்’ என்ற முதுமொழிக்கு நிரூபணமாக நின்றதும் சிவ தனுசுவே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com