ஒன்றுக்கு மேற்பட்ட விரல்களில் பெண்கள் மெட்டி அணிவது நல்லதா?

ஒன்றுக்கு மேற்பட்ட விரல்களில் பெண்கள் மெட்டி அணிவது நல்லதா?

ந்து மதத் திருமணச் சடங்குகளில் மாங்கல்யம் அணிவது எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவு மெட்டி அணிவதும் முக்கியமான சடங்காகப் பார்க்கப்படுகிறது. இந்த மெட்டி அணியும் சடங்கின்பொழுது, மணப்பெண்ணை அம்மிக் கல்லின் மீது காலை வைக்கும்படியும், அந்தக் காலின் விரலில் மணமகனை மெட்டி அணிந்து விடும்படியும் கூறுவார்கள். அவ்வாறு மெட்டி அணியும்பொழுது வானத்தில் அருந்ததி என்னும் நட்சத்திரத்தைப் பார்த்து விட்டு மெட்டியை அணியும்படி கூறுவார்கள். இந்த மெட்டி அணிவதற்கென்று சில பெருமைகள் உண்டு. எவ்வளவுதான் பணம் இருந்தாலும் காலில் அணியும் மெட்டியை தங்கத்தில் அணியக்கூடாது.

தற்காலத்தில் மெட்டி விதவிதமான வடிவங்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதற்காகப் பெண்கள் தங்களின் அனைத்து விரல்களிலும் மெட்டியை அணியக்கூடாது. அவரவர் குல வழக்கப்படி, எப்படியான மெட்டியை அணிய வேண்டுமோ? அந்த மெட்டியை கால் கட்டை விரலின் பக்கத்து விரலில் மட்டுமே அணிய வேண்டும்.

பெண்களுக்கு அழகும், மங்கலமும் தரக்கூடிய அணிகலன்களில் முக்கியமானது மெட்டி. தற்காலத்தில் உள்ள பெண்கள் பலர் மெட்டி அணிவதை திருமணம் செய்து கொண்டதன் அடையாளமாகவே பார்க்கின்றார்கள். ஆனால், அவற்றில் ஆன்மிகமும், அறிவியலும் நிறைந்திருக்கின்றன. நம் முன்னோர்கள் நமக்குக் கற்று கொடுத்திருக்கக்கூடிய ஒவ்வொரு விஷயத்துக்குப் பின்னாலும் ஏதோ ஒரு காரணம் நிச்சயம் ஒளிந்திருக்கும்.

அந்த வகையில் மெட்டியை கால் கட்டை விரலின் பக்கத்து விரலில் அணிவதே வழக்கம். ஏனெனில், அந்த விரலில்தான் கருப்பையின் நரம்பு நுனிகள் முடிகின்றன. மெட்டியை இந்த விரலில் அணிவதால் நடக்கும்போது கொடுக்கப்படும் அழுத்தம் கருப்பைக்கு கொடுக்கப்படுவதால், அங்கு இரத்த ஓட்டம் சீராக இருக்கும். அதுமட்டுமல்லாமல், மெட்டியை அணிவது கருப்பையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. மேலும், அணியக்கூடிய மெட்டியானது வெள்ளியாக இருப்பதால், அதன் மூலம் பூமியிலிருக்கும் நேர்மறை ஆற்றல் பெண்களுக்குக் கிடைக்கின்றது.

இந்தக் காரணங்களால்தான் நம் முன்னோர்கள் பெண்களை கட்டாயம் மெட்டி அணிய வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். மெட்டி தேய்ந்து விட்டால் அதனை உடனே மாற்றி விட வேண்டும். மெட்டி தேய தேய கணவன், மனைவி ஒற்றுமையும் குறையும் என்கிற ஐதீகம் உண்டு. எனவே, மெட்டி அணிபவர்கள் அதனை அதிகம் தேய்ந்து விடாமல் பாதுகாப்பது அவசியமாகும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com