நவபாஷாண ரகசியங்களும், உண்மைகளும்!

நவபாஷாண ரகசியங்களும், உண்மைகளும்!

‘நவம்’ என்றால் ஒன்பது. ‘பாஷாணம்’ என்றால் விஷம் எனப் பொருள். நவபாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்கள். சித்தர்கள் முறைப்படி ஒன்பது விஷங்களை சேர்த்துக் கட்டுவதுதான் நவபாஷாணம் ஆகும். பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளனவாம். இதில், ‘நீலி’ எனும் ஓர் பாஷாணமும் உண்டு. இந்த நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க வைக்கக்கூடிய தன்மை கொண்டது. நவபாஷாணம் என்று கூறப்படும் இந்த ஒன்பது வகையான பாஷாணங்களுக்கும் தனித்தனி வேதியல், இயற்பியல் பண்புகள் உண்டு.

சித்தர் முறைப்படி அணுக்களைப் பிரித்து, மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்கிறார்கள். இதில் அடங்கியிருக்கும் ஒன்பது பாஷாணங்கள்: சாதிலிங்கம், மனோசிலை, காந்தம், காரம், கந்தகம், பூரம், வெள்ளை பாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டி பாஷாணம் ஆகியவையாகும். இந்த நவ பாஷாணத்தின் தன்மையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன என்று கூறப்படுகிறது. நவபாஷாணக் கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமான விஷயமாகும். நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவகிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன. பழனி மலைக்கோயில், கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில், மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இந்த மூன்றில் இரண்டு சிலைகள் போகர் உருவாக்கியவை என்றும், தேவிப்பட்டிணத்தில் இருக்கும் மற்றொன்றை உருவாக்கியது யார் எனத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலைகளை வழிபடுபவர்களுக்கு நவகிரகங்களால் ஏற்படும் தீங்குகள் நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவகிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம் என்று கருதப்படுகிறது. பழனி முருகன் சிலைக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தைப் பருகுவதால் நாட்பட்ட தீராத நோய்களும் கூட தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com