சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை விஷு பண்டிகைக்காக நடை திறப்பு!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை மாதம் மற்றும் விஷு பண்டிகை பூஜைக்காக ஏப்ரல் 19-ம் தேதி வரை நடை திறக்கப்படும் என சபரிமலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்திரை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு கோவில் நடை நேற்று
மாலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காண்பித்தார்.
விஷு பண்டிகையன்று ஏப்ரல் 15-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழக்கம்போல் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும் என்றும் விஷுக்கனி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 19-ம் தேதி வரை சித்திரை மாத பூஜைகள் நடத்தப்படும் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.கேரள மாநிலம் சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தை முன்னிட்டும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

விஷு கனி தரிசனம் 15 ம் தேதி அதிகாலையில் நடைபெற உள்ளநிலையில் 19 ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி, அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன் பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் வசதிக்காக நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளன.
பின்னர், 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நாளை (புதன்கிழமை) முதல் தினசரி அதிகாலை 4.30 மணிக்கு பள்ளியுணர்த்தல், 5 மணிக்கு நடைதிறப்பு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், 5.30 மணி முதல் 9 மணி வரை நெய்யபிஷேகம், அஷ்டாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை ஆகியவற்றை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், அதைத்தொடர்ந்து படி பூஜை ஆகியவை நடைபெறும். பின்னர் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.