ராஜராஜ சோழனின் சதய விழா!

ராஜராஜ சோழன்
ராஜராஜ சோழன்

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037வது சதய திருவிழா தஞ்சை பெரிய கோயிலில் நேற்று தொடங்கி விமரிசையுடன் நடைபெற்று வருகிறது. சதய நட்சத்திரத் திருநாளான இன்று (3.11.2022) தஞ்சை பெரிய நாயகி சமேத பெருவுடையார் ஆகியோருக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற உள்ளது. ராஜராஜ சோழன் 1010ம் ஆண்டு தஞ்சை பெரிய கோயிலைக் கட்டி முடித்து கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார். உலகப் பாரம்பரியச் சின்னமாக விளங்கும் இந்தத் திருக்கோயில், இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. உலகத்தின் பல பகுதிகளை வென்று, அதை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ராஜராஜ சோழ மன்னனின் அவதாரத் திருநாள் ஐப்பசி மாதம் சதய நட்சத்திர நன்னாள் ஆகும். மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய திருநாள் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி சதய விழா நேற்று பெரிய கோயில் வளாகத்தில் மங்கள இசை, களிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கத்துடன் தொடங்கியது.

தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயில்

டந்த ஒருசில ஆண்டுகளில் நோய்த் தொற்றுக் காரணமாக எளிமையாகக் கொண்டாடப்பட்ட இந்த விழா, இவ்வாண்டு இரண்டு நாள் விழாவாக அனுசரிக்கப்படுகிறது. ஐப்பசி சதயத் திருநாளை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயில் கோபுரம் மற்றும் கோயில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளங்குகளால் அலங்கரிக்கப்பட்டு எழிலாத் தோற்றமளிக்கிறது. இதுதவிர, திருக்கோயில் நுழை வாயில் விசேஷமாக அலங்கரிப்பட்டுக் காட்சி தருகிறது. மேலும் பெரிய கோயில் அருகே அமைந்துள்ள பாலம் மற்றும் பூங்கா ஆகியவையும் மின் ஒளி வெளிச்சத்தில் மின்னுகின்றன. சதயத் திருவிழாவை முன்னிட்டு தஞ்சை மாநகரமே விழாக் கோலம் பூண்டு காட்சி தருகிறது. மேலும், தஞ்சை நகரின் பல பகுதிகளிலும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை ஒரு நாள் தஞ்சை மாவட்டத்துக்கு அரசு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com