சயனதுர்க்கை கோவில் எங்கு இருக்கு தெரியுமா?

சயனதுர்க்கை கோவில் எங்கு இருக்கு தெரியுமா?

வாழ்வில் மேன்மை பெறவும் துன்பம் நீங்கவும் துர்கா தேவியை வணங்க வேண்டும் என்றும், மங்கள ரூபிணியான அவள் தரிசனம் கண்டாலே சர்வ மங்கலமும் உண்டாகும் என்றும், நமது முன்னோர்கள் வழிகாட்டி உள்ளனர் . அந்த துர்க்கை அம்மனை ஆலயங்களில் பெரும்பாலும் கோஷ்ட தெய்வமாக சந்நிதி கொண்ட நிலையில் சிவதுர்க்கையாக அல்லது விஷ்ணு துர்க்கையாக தரிசிக்கலாம். அபூர்வமாக  சில இடங்களில் தனி கோயிலிலும் அமர்ந்த கோலத்திலும் காணப்படுவது உண்டு. ஆனால் அந்த அம்மன் சயன கோலத்தில் அருள் பாலிக்கும் திருத்தலம் ஒன்று செழியநல்லூரில் உள்ளது.

பல வருடங்களுக்கு முன் செழியநல்லூர் பகுதியை செழியன் என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான் அவன் காவல் தெய்வமாக வடக்கின் செழிய அம்மனையும் கிழக்கில் தர்மசாஸ்தாவையும் தெற்கில் வலம்புரி விநாயகரையும் மேற்கே தன்னுடைய குலதெய்வமாகிய வனதுர்க்கையையும் அமைத்து தினம் தோறும் குடும்பத்துடன் வழிபட்டு வந்தான்.

ஒருமுறை வன துர்க்கை வழிபாட்டிற்கு வந்திருந்த தருணத்தில் அரசனின் எட்டு வயது பெண் குழந்தை வீடு திரும்பாமல் வனத்திலேயே தங்கிவிட்டது. தனது பெற்றோரை காணாது தவித்துக் கொண்டிருந்த அந்த குழந்தையின் நகைகளை  அபகரிக்க வந்தான் ஒரு திருடன். அச்சத்தில் அலறிய அந்த குழந்தை ஓடி வந்து வனதுர்க்கை அம்மனை கட்டிக் கொண்டது.

திருடன் குழந்தையைப் பிடித்து இழுக்க, குழந்தையுடன் அம்மனின் சிலையும் கீழே சாய்ந்தது அப்போது துர்க்கை பிரசன்னமாகி திருடனை வதம் செய்ததுடன் குழந்தையையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டாள். அரசனின் கனவிலும் அந்த தகவலை தெரிவித்தாள். இப்போதும் அந்த அன்னை சயன கோலத்திலேயே அந்த குழந்தையை கல் ரூபத்தில் தனது பக்கத்தில் வைத்து காத்தருள்கிறாள்  என்கின்றனர்.

துர்க்கை அம்மன் நாகராஜ பரிவார தேவதைகளுடன் வேப்ப மரத்தின் அடியில் சயனக் கோலத்தில் வெட்ட வெளியில் மேலே வானத்தைப் பார்த்த நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள்.

அம்மனின் காலின் கீழ் ஒரு ஆட்டின்தலை உருவம் தெரிகின்றது. மேஷத்தின் மேல் இருப்பதாக ஐதீகம். இந்த வேப்ப மரத்தின் இலைகள் கசப்பதில்லை என்பது மற்றொரு சிறப்பு. இவற்றை உண்பவர்களுக்கு நோய்கள் தீரும் என்பதும் நம்பிக்கை. 

மற்றொரு சன்னதியில் புதியதாக நின்ற கோலத்தில் வைஷ்ணவி துர்க்கை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வலம்புரி விநாயகர், ஸ்ரீ பாலசுப்பிரமணிய சாமி சில ரூபங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. முதலில் வனதுர்க்கைக்கு பூஜைகள் செய்த பின்னரே வைஷ்ணவி துர்க்கைக்கு பூஜைகள் நடைபெறுகின்றன.

சயன துர்கையை வழிபடுபவருக்கு புத்திர பாக்கியம் கிட்டும் தீராத நோயும் தீரும்.

அமைவிடம் திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் கங்கைகொண்டான் செல்லும் வழியில் பராஞ்சேரி அருகில் உள்ளது வடக்கு செழியநல்லூர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com