எது அவசரம் என்பது கடவுளுக்குத் தெரியும்!

எது அவசரம் என்பது கடவுளுக்குத் தெரியும்!
Picasa

ஷ்ட காலத்தில் தெய்வத்தை நிந்தனை செய்த ஒருவர், ஒரு சமயம் காஞ்சி மகாபெரியவரை தரிசனம் செய்ய வந்திருந்தார். அவர் யார்? எங்கேயிருந்து வருகிறார் என்பதெல்லாம் தெரியாது. ஏனென்றால், அவர் மடத்துக்கு அடிக்கடி வருகிற ஆசாமி இல்லை. அவர் மகாபெரியவாளை தரிசனம் பண்ண வந்ததுகூட வேறு ஏதோ வேலையாக மடத்துப் பக்கமா வந்தவர், அப்படியே எட்டிப் பார்த்துவிட்டுப் போகலாமேன்னுதான். வந்தவர் வரிசையில் நின்றார். தன்னோட முறை வந்ததும் பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார். எல்லாம் கடனேன்னு செய்வது மாதிரிதான் இருந்தது.

நமஸ்காரம் செய்தவர் எழுந்ததும் பெரியவா அவரைப் பார்த்து, "என்ன, சுவாமியெல்லாம் திட்டறதுல இருந்து ஒருவழியா ஓய்ஞ்சுட்டே போல இருக்கு. திட்டியும் பிரயோஜனமில்லைன்னு தோணிடுத்து. அதனால தினமும் செஞ்சுண்டு இருந்த பூஜையைக்கூட நிறுத்திட்டே இல்லையா?" என்று கேட்டார்.

வந்தவருக்கு அதிர்ச்சி. அதோட, 'என்னடா இது… நாம எதுவுமே சொல்லலை. ஆனா, எல்லாத்தையும் பக்கத்துல இருந்து பார்த்தவர் மாதிரி இவர் சொல்றாரே!' என்று ஆச்சரியம்.

"பெரியவா! குடும்பம் நடத்தறதே ரொம்ப கஷ்ட ஜீவனமாயிடுத்து. சரியா வேலையும் கிடைக்கிறதில்லை. பகவானை வேண்டிண்டு ஒரு பிரயோஜனமும் இல்லைன்னு புரிஞ்சுடுத்து. மத்தவாளுக்கெல்லாம் கேட்கறதுக்கு முன்னாலேயே குடுக்கிற சுவாமி, எனக்கு மட்டும் ஏன் இப்படிப் பண்றார்? அதான் எல்லாத்தையும் நிறுத்திட்டேன்" கண்களின் ஓரத்தில் நீர் தளும்ப தழுதழுப்பா சொன்னார் அவர்.

பரிவோடு அவரைப் பார்த்த பரமாசார்யா, "ஒரு விஷயம் கேட்கிறேன். கரெக்டா யோசிச்சு சொல்லு. ஒரு ஆஸ்பத்திரிக்கு தினமும் எத்தனையோ நோயாளிகள் வருவா. சிலருக்கு காய்ச்சல் வந்திருக்கும். சிலருக்கு பல் வலி. இவர்கள் எல்லாம் அங்கே வந்திருக்கும்போது, பாம்பு கடிச்சுடுத்துன்னு ஒருத்தரைக் கூட்டிண்டு வருவா. மாடியில் இருந்து தவறி விழுந்து நினைவு தப்பிடுத்துன்னு ஒருத்தரைத் தூக்கிண்டு வருவா. இந்த மாதிரியான சந்தர்ப்பத்துல டாக்டர்கள் என்ன பண்ணுவா? யாருக்கு உடனடியா சிகிச்சை பண்ணணுமோ, யாருக்கு சட்டுன்னு சிகிச்சை பண்ணலைன்னா, அது பிரயோஜனப்படாதோ, யாருக்கு மரண அவஸ்தை தீரணுமோ அவங்களைப் பார்க்க போயிடுவா. அதுக்காக சாதாரண காய்ச்சல்னோ, தலைவலின்னோ வந்தவாளை டாக்டர்கள் எல்லாம் அலட்சியப்படுத்தறாங்கறது அர்த்தம் இல்லை. அவாளுக்குக் கொஞ்சம் தாமதமா சிகிச்சை தந்துக்கலாம். பெரிய அவஸ்தை எதுவும் வந்துடாது. ஆனா, பாம்புக்கடி பட்டவருக்கோ, விபத்துல சிக்கினவாளுக்கோ உடனடியா மருத்துவம் பார்த்தாகணும்.

சாதாரண நோயாளிகளுக்கு சிகிச்சை பண்ற டாக்டர்களுக்கே யாருக்கு, எப்போ உதவணும்கறது தெரியறதுன்னா, பிறவிப்பிணிக்கே சிகிச்சை பண்ணி, அதனால் வரக்கூடிய சங்கடங்களைப் போக்கக்கூடிய பகவானுக்கு யாரோட பிரச்னையை உடனடியா தீர்க்கணும்னு தெரியாதா? உனக்கு சுவாமியோட கடாட்சம் கிடைக்க கொஞ்சம் தாமதமாறதுன்னா உன்னை விட அதிகமா அவஸ்தைப் பட்டுண்டு இருக்கிற யாருக்கோ உதவறதுக்காக சுவாமி ஓடியிருக்கார்னு அர்த்தம். அந்த வேலை முடிஞ்சதும் அவசியம் உனக்கும் அனுக்ரஹம் பண்ணுவார். அதுக்குள்ளே அவசரப்பட்டு, தெய்வத்தை நிந்திக்கிறதும் பூஜை புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகமா பேசறதும் தப்பு இல்லையா?" என்றார்.

மகாபெரியவா சொல்லச் சொல்ல, கடவுளைப் பற்றி தப்பா நினைச்சதும் பேசினதும் தப்புன்னு புரிஞ்சதுக்கு அடையாளமா அந்த ஆசாமியோட கண்களில் இருந்து தாரை தாரையா நீர் வடிந்தது. அதுவே அவரின் தவறான எண்ணத்தை அலம்பி, அவரோட மனசை சுத்தப்படுத்தியிருக்கும் என்பதும் நிச்சயம். மன அழுக்கைப் போக்க வழிசெய்த மகானை பரிபூரணமான நம்பிக்கையோடு மறுபடியும் நமஸ்காரம் செய்துவிட்டுப் புறப்பட்டார் அந்த நபர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com