அழியா இலங்கை அம்மன்!

அழியா இலங்கை அம்மன்!

க்தி வழிபாடு மிகத் தொன்மையானது. என்றாலும், அம்பிகையின் சில திருநாமங்களும் வடிவங்களும் வியப்பூட்டுபவை. அப்படிப்பட்ட திருநாமங்களில் ஒன்று, அழியா இலங்கை அம்மன். எங்கே இருக்கிறது இந்த அன்னையின் ஆலயம்?

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டத்திலுள்ள கூனவேலம்பட்டி புதூர் என்னும் கிராமத்தில் கோயில் கொண்டு அருள்கிறாள் இந்த அழியா இலங்கை அம்மன். இவ்வூரின் வடக்கெல்லையில் உள்ள ஆலவாய் மலை அடிவாரத்தில்தான் அமைந்துள்ளது ஆலயம். சரி, ஏன் இந்தப் பெயர்?

சீதையைத் தேடி அனுமன் இலங்கை சென்ற சமயம், வடக்கு வாசலில் காவலுக்கு நின்ற இலங்கை அம்மன் தடுத்தாள். அனுமன் தன் வாலினால் இலங்கை அம்மனைக் கட்டி சுருட்டி வீச, அங்கிருந்து கூனவேலம்பட்டி புதூராகிய இங்கு வந்து  தலைகீழாக விழுந்தாளாம். அதனால் இங்கு இத்தெய்வத்தின் பாதங்களையே வழிபடுகிறார்கள்.  இலங்கை அழிவதற்கு முன்பே இங்கு வந்து சேர்ந்ததால், ‘அழியாத இலங்கை அம்மன்’ என அழைக்கப்படுகிறாள். 

அம்மனுக்குரிய சிலை, சிவனும் பார்வதியும் இணைந்த அழகிய லிங்க வடிவில் அமைந்துள்ளது. இதனால் ‘அழகிய லிங்க (வடிவமான) அம்மன்’ என அழைக்கப்பட்டு, அதுவே மருவி அழியா இலங்கை அம்மன் என்று அழைக்கப் படுவதாகவும் அறிகிறோம்.   ஆக, இரு வகையில் பெயர்க்காரணம்.

ஆரம்பத்தில் புதரும் புல்வெளியுமாக மண்டிக் கிடந்த இந்த இடத்தில் இருந்த புற்றில், மேய்ச்சலுக்கு வந்த ஒரு மாடு மட்டும் இங்கு வந்து பாலைச் சொரிந்துவிட்டுச் சென்றதாம். மாடு சரியாகப் பால் கறக்கவில்லையே என சந்தேகப்பட்ட முதலாளி, மாட்டைப் பின் தொடர்ந்து சென்று பார்த்தபோது விஷயத்தை அறிந்துகொண்டார். அவர் கனவில் அம்மன் தோன்றி தன் வரலாறைக் கூற, இங்கே பந்தல் போடப்பட்டு தொடங்கிய வழிபாடு வழிவழியாக வளர்ந்துள்ளது.

ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது  அழியா இலங்கை அம்மன் கோயில். நாற்புறமும் மதில் சுவர் எழுப்பப்பட்டு, மூன்று வாயில்களுடன்  அதியற்புதமாகத் திகழ்கிறது. வடக்கு, கிழக்குத் திசையிலுள்ள வாயில்கள்தான் தினமும் திறக்கப்படுகின்றன. திருவிழாக் காலங்களில் மட்டுமே மேற்குத் திசை வாயில் திறக்கப்படுகிறது.

வடக்கு வாசல் முன்பாக 25 அடி உயரத்திலும், முன் மண்டபத்துக்கு எதிரில் வடக்கு வாசலுக்குச் செல்லும் வழியில் 10 அடி உயரத்திலுமாக கொடிக் கம்பங்களைக் காண்கிறோம். கருவறை முன் மண்டபம் 16 தூண்களால் எழுப்பப்பட்டுள்ளது. இத்தூண்களில் பல தெய்வ உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முன் மண்டபத்தை ஒட்டி அமைந்துள்ள ஊஞ்சலில், திருவிழாவின்போது அம்மனை ஊஞ்சலில் வைத்து பாட்டுப் பாடி ஆட்டுவார்கள். ஊஞ்சலுக்கு அரு கிலுள்ள முன் மண்டபத்தில் ஒரு சிறு வட்டக்கல் மீது ‘பூ பொட்டலம் பார்த்தல்’ என்பது நடைபெறுகிறது. சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறப் பூக்களில் ஏதாவது இரண்டு வகைப் பூக்களை மட்டும் ஒற்றைப் படை எண்ணிக்கையில் பொட்டலம் கட்டிவைத்து,  குழந்தையைவிட்டு எடுக்கச் சொல்வர்.

கருவறை, புற்று வடிவில் அமைந்துள்ளது. இப் புற்றில் தலைகீழாக வடக்கு நோக்கி நிற்கும்போது இரண்டு பாதங்களும் மேல்நோக்கி அமைந்திருக் கின்றன. பாதங்களின் விரல்கள் வடக்கு நோக்கி அமைந்துள்ளன. திருவிழாக் காலங்களில் மட்டும் இப்பாதத்தின்மீது உருவச்சிலை ஒன்று வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது. 

அத்தனூர் அம்மன், விநாயகர், முனியப்பன், பசு, நந்தி, நாகம் ஆகியோர் அழியா இலங்கை அம்மனின் துணைத் தெய்வங்களாக அமைந்துள்ளனர். அம் மனுக்கு வலப்பக்கத்தில் நான்கு கால் மண்டபத்தில் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. அத்தனூர் அம் மன், இலங்கை அம்மனின் தமக்கையாக அழைக்கப் படுகிறாள். தனிக் கட்டடம் ஒன்றில் அழியா இலங்கை அம்மனின் குழந்தைகள் என அழைக்கப் படும் 27 குழந்தைகள், உருவங்களாக அமைக்கப் பட்டுள்ளனர். இவர்களை 27 நட்சத்திரங்களாக வழி படுகின்றனர். இக்கட்டடத்தின் இன்னொரு புறத்தில் நாகச் சிற்பங்களைக் காணலாம். கோயிலுக்கு வெளி யேயுள்ள பாம்புப் புற்றுகளில் பால் ஊற்றி முட்டைகளை உடைத்து வழிபடுகிறார்கள். இதனால், பிரசவம் சிறப்பாக அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

முனியப்பன் கோயிலில் கிழக்கு முகமாக அமைந்த மூன்று முனிகளின் மிகப்பெரிய வடிவத்தைத் தரிசிக்கலாம்.  முனியப்பனுக்கு பலியிடல்  நடைபெறுகிறது.  இவரை வணங்கினால் எவ்வித கர்ப்பக்கோளாறும் சரியாகிவிடும்; பேய், பிசாசுகளும் அண்டாது என்பதும் நம்பிக்கை. இவரை வணங்கினால் பிள்ளைப்பேறும் வாய்க்கிறது. இங்குள்ள வில்வ மரத் தில் தொட்டில் கட்டியும் வேண்டிக் கொள்கிறார்கள்.

முனியப்பனுக்கு முன்பாக மண்சுதையால் செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்பட்ட பசு ஒன்றைக் காணலாம். வீட்டிலுள்ள பசுக்கள் நலத்துடன் இருக் கவும், நோய்கள் நெருங்காமல் இருக்கவும் சிறிய பசு உருவங்களை மண்ணால் செய்து காணிக்கையாக இப் பெரிய பசுவின் அருகில் கொண்டுவந்து வைக்கிறார்கள். இதேபோன்று நாய் மற்றும் பாம்பு உருவங்களை யும் காணிக்கையாக சமர்ப்பிக்கிறார்கள். ‘உருள் தண்டம்’ எனப்படும் அங்கப்பிரதட்சண வழிபாட்டை, கோயிலில் மும்முறை வலம் வந்து செய்கின்றனர்.

இலங்கை அம்மனுக்கான திருவிழா, ஆண்டு தோறும் தீபாவளிப் பண்டிகையை அடுத்து வரும் திங்கட் கிழமையன்று காய்வெட்டிப் போடுதல் என்ற நிகழ்வுடன் தொடங்குகிறது. விழாவின் இறுதி நிகழ்வாக திருக்கோடிக் கம்பத்தில் ஒரு பெரிய துணியிலான திரியைக் கொண்டு திருக்கோடி ஏற்றப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்படும்  இக்கோயிலில், அழியா நலங்களை அருளவே தரிசனம் தந்து கொண்டிருக்கிறாள் அழியா இலங்கை அம்மன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com