தைப்பூச விரத வழிபாடும் பலன்களும்!

தைப்பூச விரத வழிபாடும் பலன்களும்!

முருகப் பெருமானை வழிபட செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி ஆகியன சிறந்த நாட்களாகும். இதேபோல் முருகப் பெருமானின் முக்கிய நிகழ்வுகளைக் குறிக்கும் நான்கு நட்சத்திரங்களில் அவரை வழிபட்டாலும் அனைத்து விதமான நன்மைகளும் பெறலாம். முருகனையும், முருகன் கையில் இருக்கும் வேலையும் வணங்குவோருக்கு பயம், தோல்வியே கிடையாது. வறுமை நீங்கும்.

தைப்பூச திருநாளில் உலகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பால் குடங்கள், பல விதமான காவடி, தேரோட்டம் ஆகியன நடத்தப்படுவது வழக்கம். தைப்பூசத்தன்று வேல் குத்தியும், காவடி தூக்கியும் முருகனை வழிபடுவது பல காலமாக வழக்கத்தில் உள்ளது.

முருகப் பெருமானுக்குரிய முக்கியமான விரத நாட்களில் வைகாசியில் வரும் விசாகம், பங்குனியில் வரும் உத்திரம், தை மாதத்தில் வரும் பூசம், கார்த்திகையில் வரும் கிருத்திகை ஆகிய நான்கு நட்சத்திரங்களும் மிக விசேஷமானவை. வைகாசி விசாகம் முருகனின் பிறந்த நட்சத்திரம், பங்குனி உத்திரத்தன்று முருகன் தெய்வானையை மணம் முடித்த நாள், கிருத்திகை ஆறுமுகம் கொண்ட உருவத்தை சக்தி ஒரே உருவமாக இணைத்த தினம். தைப்பூசம், பார்வதியிடம் இருந்து முருகன் வேல் பெற்ற தினம் என்பார்கள்.

இவ்வாறு பல சிறப்புகளைக் கொண்டதால் தைப்பூச விழா மிகவும் பிரபலமாக உள்ளது. உலக அளவில் முருக பக்தர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் விழாவாக தைப்பூசம் உள்ளது. பெரும்பாலானவர்கள் தைப்பூசத்தை முன்னிட்டு 48 நாட்கள் விரதம் இருப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். மார்கழி மாதம் துவங்கி, தைப்பூசம் வரை விரதம் மேற்கொள்வார்கள்.

தைப்பூச நாளில்தான் பூமியில் நீர் தோன்றி, அதிலிருந்து உயிர்கள் தோன்றத் துவங்கியதாகப் புராணங்களும், சாஸ்திரங்களும் சொல்கின்றன. தைப்பூச நாளில்தான் முருகப் பெருமான் தனது தந்தை சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசம் தெய்தார். பராசக்தியிடம் இருந்து வேல் வாங்கி, கையில் வேல் தாங்கி முருகன் நின்ற தினம் இன்றுதான். அகத்தியருக்கு முருகப் பெருமான் தமிழை கற்பித்ததும் இந்த நாளில்தான் என புராணங்கள் சொல்கின்றன. சிதம்பரம் நடராஜர் ஆனந்தத் தாண்டவம் ஆடி பிரம்மா, விஷ்ணு, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோருக்குக் காட்சி கொடுத்த நாளும் தைப்பூச தினம்தான்.

தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பெளர்ணமி திதியும் இணையும் நாளை தைப்பூசம் என்கிறோம். 2023ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 4 ம் தேதி இரவு 10.41 மணிக்குத் துவங்கி, பிப்ரவரி 6ம் தேதி அதிகாலை 12.48 மணி வரை பெளர்ணமி திதி உள்ளது. இதேபோல் பிப்ரவரி 4ம் தேதி காலை 10.41 துவங்கி, பிப்ரவரி 5ம் தேதி பகல் 1.14 மணி வரை பூசம் நட்சத்திரம் உள்ளது. பிப்ரவரி 5ம் தேதியே நாள் முழுவதும் பெளர்ணமி உள்ளதால் அந்த நாளே தைப்பூச நாளாகக் கருதப்படுகிறது.

இன்று அதிகாலை நீராடி, நெற்றியில் திருநீறு அணிந்து, முருகன் படத்துக்கு முன் விளக்கேற்ற வேண்டும். காலை, பகல் இரு வேளையும் பால், பழம் மட்டுமே அருந்த வேண்டும். இருவேளையும் கோயிலுக்குச் செல்வது சிறப்பு. முடியாதவர்கள் மாலையில் மட்டுமாவது கோயிலுக்குச் சென்று முருகனை வழிபட வேண்டும்.

தைப்பூசத்தன்று முருகன், சிவன், குரு பகவான் ஆகியோரை வழிபடலாம். முருகனுக்கு நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், பால் பாயசம் இவற்றில் ஏதாவது ஒன்றை படைத்து வழிபடலாம். தைப்பூசத்தன்று வேல் வழிபாடு செய்வதும் சிறப்பான பலனைத் தரும்.

இன்று நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கந்தர் கலி வெண்பா ஆகிய பாடல்களைப் பாராயணம் செய்யலாம். முடியாதவர்கள், ‘ஓம் சரவண பவ’ என்ற மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரிக்கலாம்.

தைப்பூசத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். செல்வம் பெருகும், கணவன்- மனைவி ஒற்றுமை சிறக்கும், தொட்ட காரியம் அனைத்தும் பூரணமாக நிறைவேறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com