தை அமாவாசை வழிபாட்டில் செய்யக் கூடியதும் செய்யக் கூடாததும்!

தை அமாவாசை வழிபாட்டில் செய்யக் கூடியதும் செய்யக் கூடாததும்!

ருடம் முழுவதும் அமாவாசை தினங்கள் வந்தாலும் ஆடி அமாவாசை மற்றும் தை மாத அமாவாசை தினங்களே முன்னோர் வழிபாட்டுக்கு மிக உகந்ததாக இந்து மதத்தை சேர்ந்தவர்களால் கடைபிடிக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் அமாவாசை தர்ப்பணம் செய்து பித்ரு வழிபாட்டை செய்யாதவர்கள் கூட இந்த தை மாத அமாவாசை தினத்தில் முன்னோர் வழிபாட்டைச் செய்து வருடம் முழுவதும் அமாவாசை தர்ப்பணம் செய்த பலனைப் பெறலாம்.

ஆடி அமாவாசையன்று நமது மூதாதையர்களை வரவேற்கும் நாம், தை மாத அமாவாசையன்று அவர்களுக்கு விடைகொடுத்து அனுப்பி வைக்கிறோம். இந்நாளில் புனித தீர்த்தத் தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து முன்னோர்களின் தாகத்தை தீர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அவர்கள் வாழும் காலத்தில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த தினத்தில் நமது முன்னோர்கள் காகத்தின் வடிவில் நமது வீட்டுக்கு வருகை தருவதாக ஐதீகம். அதனால் அன்று காகத்துக்கு உணவு அளிப்பது மிகவும் முக்கியம். இனி, இந்த தினத்தில் செய்ய வேண்டியது என்னென்ன என்பதைக் குறித்துக் காண்போம்.

முன்னோர்களுக்கு கடல், ஏரி, குளம், ஆறு போன்ற நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுத்த பிறகு வீட்டுக்குத் திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படங்களை சுத்தம் செய்து, வடக்கு கிழக்கு திசை பார்த்து வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். அப்போது அவர்கள் பயன்படுத்திய பொருட்களை அங்கு வைத்து குத்து விளக்கு ஏற்ற வேண்டும். அதேபோல், மறைந்த நமது முன்னோர்களுக்கு மிகவும் பிடித்த இனிப்பு, காரம் மற்றும் பழ வகைகளையும் படைக்க வேண்டும். முன்னோர் வழிபாட்டுக்குப் பிறகு கோதுமை தவிடு, அகத்திக் கீரை போன்றவற்றை பசுவுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும். அவற்றை உண்டு முடித்ததும் அவை தாகம் தீர்க்க தண்ணீர் வைக்க வேண்டும்.

அதேபோல், அன்று வீட்டில் தெய்வம் சம்பந்தமான பூஜைகள் இருந்தால், முன்னோர் தர்ப்பணம் முடியும் வரை அதை தள்ளி வைப்பது நல்லது. தர்ப்பணம் கொடுத்து முடித்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம்.

இனி, அமாவாசை காலத்தில் செய்யக் கூடாதவற்றைக் காண்போம். இன்றைய தினத்தில் மாமிசம் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிடக் கூடாது. தர்ப்பணத்துக்காக கருப்பு எள்ளை மற்றவரிடம் கடனாக வாங்கக் கூடாது. மேலும், நீரில் நின்று கொண்டு கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கக் கூடாது. அதேபோல், கரையில இருந்துகொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக் கூடாது. முன்னோர் வழிபாட்டை எப்போதும் கிழக்கு நோக்கி பார்த்தபடிதான் செய்ய வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com