‘ஹரிவராசனம்’ பாடல் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?

‘ஹரிவராசனம்’ பாடல் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?

கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. இன்று தொடங்கி அடுத்து ஒரு மண்டல காலம் வரை எங்கும் ஐயப்ப கோஷமும், பாடல்களும் நமது காதுகளில் ரீங்காரமிடும். கல்லிடைகுறிச்சியை சேர்ந்த கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர் இயற்றி, கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் இனிமையான குரலில், பெருவாரியான ஐயப்ப பக்தர்கள் விரும்பிக் கேட்டும் பாடலான, ‘ஹரிவராசனம்’ பாடலின் பொருளை அறிவோம்; பக்தியோடு அதைப் பாடிக் களிப்போம்!

‘ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே’

பொருள்: அரியாகிய திருமாலின் ஆசிகள் நிறைந்தவர், பேரண்டத்தை இயக்குபவர், அரியின் அருளின் சாராம்சமாக இருப்பவர், உமது தெய்வீகப் பாதங்களை வணங்குகிறோம். தீய சிந்தனைகளை அழிப்பவரே, இந்த அண்டத்தை ஆள்பவரே, அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்!

‘சரணகீர்த்தனம் பக்தமானஸம்
பரணலோலுபம் நர்த்தனாலயம்
அருணபாசுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே’

பொருள்: சரண் அடைவோரின் பாடலை விரும்புபவர், பக்தர்களின் மனதில் நிறைந்தவர், பக்தர்களை ஆள்பவர், ஆடலை விரும்புபவர், உதிக்கும் சூரியன் போல பிரகாசிப்பவரே, உயிர்களின் வேந்தரே, அரி மற்றும் அரனின் புதல்வரே உங்களைச் சரணடைந்தோம்!

‘பிரணயசத்யகம் பிராணநாயகம்
ப்ரணதகல்பகம் சுப்ரபாஞ்சிதம்
பிரணவமந்திரம் கீர்த்தனப்பிரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே’

பொருள்: உண்மையின் உணர்வாக இருப்பவர், எல்லா உள்ளங்களின் விருப்பமாக இருப்பவர், பேரண்டத்தைப் படைத்தவர், சுடரொளி வீசும் ஒளிவட்டமாய் திகழ்பவர், 'ஓம்' எனும் மந்திரத்தின் ஆலயம் நீங்கள்; பக்தர்களின் பாடல்களை விரும்புபவர் நீங்கள்; அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்!

‘துரகவாகனம் சுந்தரானனம்
வரகதாயுதம் தேவவர்ணிதம்
குருகிருபாகரம் கீர்த்தனப்பிரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே’

பொருள்: குதிரையை வாகனமாகக் கொண்டவரே, அழகிய திரு உருவம் கொண்டுள்ளவரே, ஆசிர்வதிக்கப்பட்ட தண்டாயுதத்தை ஏந்துபவர், ஒய்யாரமானவர்; என்னுடைய குரு நீங்கள். பக்தர்களின் பாடல்களை விரும்புபவரே, அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்!

‘திரிபுவனார்ச்சிதம் தேவதாத்மகம்
திரிநயன பிரபும் திவ்யதேசிகம்
திரிதசப்பூஜிதம் சிந்திதப்பிரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே’

பொருள்: மூவுலகாலும் வணங்கப்படுபவர், கடவுளர்களின் ஆன்மாவாகத் திகழ்பவர், சிவனின் உருவமாக இருப்பவர், தேவர்களால் வணங்கப்படுபவர்; உங்களை தினந்தோறும் மூன்று முறை வணங்குகிறோம். எங்கள் மனம் நிறைந்தவர் நீங்கள்; அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்!

‘பவபயாபகம் பாவுகாவகம்
புவனமோகனம் பூதிபூசணம்
தவளவாகனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே’

பொருள்: அச்சத்தை அழிப்பவர், செழிப்பை கொணர்பவர், இந்த அண்டத்தை ஆள்பவர், திருநீற்றை ஆபரணமாக அணிந்தவர், வெள்ளை யானையை வாகனமாகக் கொண்டவர் நீங்கள். அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்!

‘களம்ருதுஸ்மிதம் சுந்தரானனம்
களபகோமளம் காத்ரமோகனம்
களபகேசரி வாஜிவாகனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே’

பொருள்: இனிமையான, மிருதுவான புன்முறுவல் உடையவரே, அழகிய திருமுகத்தை உடையவரே, இளமையும், மென்மையும் உடையவர். சொக்க வைக்கும் பேரழகையும், யானை, சிங்கம், குதிரை போன்றவற்றை வாகனமாகவும் கொண்டவர் நீங்கள். அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்!

‘ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரிதம்
ச்ருதிவிபூஷணம் சாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலசம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே’

பொருள்: பக்தர்களால் நேசிக்கப்படுபவர், பக்தர்களின் வேண்டுதல்களை பூர்த்தி செய்பவர், வேதங்களால் துதிக்கப்படுபவர், ஞானியரை ஆசிர்வதிப்பவர். வேதங்களின் சாராம்சம் நீங்கள்; தெய்வீக இசையை ரசிப்பவர் நீங்கள். அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்!

பாடலின் பொருளையும் அது கூறும் பெருமையையும் ஆழ்ந்து உணர்ந்து, ஒரு பாடலை பாடும்போதும் அல்லது கேட்கும்போதும் அதன் மூலம் கிடைக்கும் சுகானுபவமே தனிதான் இல்லையா?!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com