ஹோமங்களும் பலன்களும்!

ஹோமங்களும் பலன்களும்!

மித்துகள் என்பது யாகம் செய்யும் ஹோம குண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள் ஆகும். ஒவ்வொரு சமித்துகளுக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உள்ளன. அப்படிப் பலன் தரும் சில சமித்துகளையும் அவை எந்த தெய்வத்துக்கு உகந்தது என்பதையும் பார்ப்போம். பொதுவாக, பாலுள்ள சமித்துக்களைக் கொண்டு ஹோமம் செய்வது வியாதி நாசினியாகத் திகழ்கிறது.

வில்வம்: சிவனுக்கும் மகாலட்சுமிக்கும் பிடித்தமானது. வில்வ சமித்தினைக் கொண்டு ஹோமம் செய்ய, ராஜ யோகம் கிட்டும். செல்வம் சேரும்.

துளசி: நாராயணனுக்கு மிகவும் உகந்தது. இதனால் ஹோமம் செய்ய, நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். எண்ணிய காரியம் நிறைவேறும்.

அத்தி: சுக்ரனுக்கு மிகப் பிடித்தமானது. இதைக்கொண்டு யாகம் செய்ய, பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும். பில்லி, சூனியம், பிசாசு பயங்கள் விலகி, சத்ருக்களை வெல்லும். பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு ஸித்தி ஏற்படும். மக்கட்பேறு உண்டாகும்.

நாயுருவி: புத பகவானுக்குப் பிடித்தது. இதனால் லக்ஷ்மி சுடாட்சம் ஏற்படும். சுதர்சன ஹோமத்துக்கு இதுவே சிறந்தது.

அரசு: குரு பகவானுக்கு மிக உகந்தது. அரச மரத்தின் சமித்தால் தலைமைப் பதவி கிடைக்கும். போரில் வெற்றி கிடைத்து அரச நன்மை கிடைக்கும்.

வன்னி: சனீ பகவானுக்கு மிக உகந்தது. இதனால் கிரகக் கோளாறுகள் நீங்கும். இதில் அக்னி பகவான் உறைந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. வன்னி சமித்து யாக பஸ்மாவைத் தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும். இந்த சமித்து பஸ்பம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும், மூவுலகினையும், மூன்று அக்னிகளையும், முக்குணங்களையும் குறிப்பதாக இருக்கிறது. சகல தெய்வ, தேவாதிகளும் இச்சமித்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள். பூகம்பங்களால் உண்டாகும் பயங்கள் நீங்கும். சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.

அருகம் புல்: விநாயகருக்கும், ராகுவுக்கும் மிகவும் பிடித்தது. இதனால் பூர்வ ஜன்ம வினைகளும் சர்வ இடையூறுகளும் நீங்கி காரியம் ஸித்தியடையும். கீர்த்தியும், புகழும் பெறலாம். அறிவும், அழகும், வசீகரமும் உண்டாகும். கணபதி ஹோமத்தில் இதைப் பயன்படுத்துவார்கள்.

ஆலம்: ம்ருத்யஞ்சய வேள்வியின் முக்கிய சமித்து இது. யமனுக்கு மிகப் பிடித்தமானது. இதைக்கொண்டு யாகம் செய்ய நோய்கள் நீங்கும். ஆயுள் நீடிக்கும். புகழ் சேரும்.

வில்வப்பழம்: செல்வங்களைப் பெறலாம். சிவசக்தி சம்பந்தமான சண்டி ஹோமம் போன்ற யாகங்களில் வில்வத்தை சமித்தாகப் பயன்படுத்தினால் பலன்கள் நிறைய உண்டு.

சோமவல்லிக்கொடி: கொடிக்கள்ளி எனப்படும் இதன் ரசத்தைப் பிழிந்து ’சோமாம்ருதம்’ ம்ருத்யுஜய மந்திரத்தினால் ஹோமம் செய்தால் சகல நோய்களும் நீங்கி, தேகத்தில் அமிர்தம் உண்டாகி பிரம்மதேஜஸ் பெறலாம். கொடியை கணுக்கள் தோறும் ஒடித்து பாலில் தோய்த்து சூர்ய மந்திரம் கூறி அக்னிக்கு இட வேண்டும். இதனால் காச நோய் அகலும்.

பலாசு: இது சந்திர கிரக சமித்தாகும். இதனால் சந்திர கிரக பிரீதி ஏற்படும். பலாசு புஷ்பத்தால் எல்லா இஷ்ட காரியங்களும், பலாசு ரஸத்தால் ஞான விருத்தியும், சிறந்த புத்தியும் பெறலாம். பலாசு குச்சிகளை அக்னி ஹோத்திரம் செய்து அதனால் ஸ்நாபானம் செய்யின் ப்ரம்ம ஞானம் அடைந்து பரப்பிரம்ம சொரூபம் அடையலாம்.

வெள்ளெருக்கு: இது சூரிய கிரகத்தின் சமித்தாகும். இம்மூலிகை சர்வசக்தி பொருந்தியது. வசியம், மோகனம் ஆகிய அஷ்டாமித்துகளையும் அடையலாம். ராஜ வசியம், ஸ்திரீ வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம் ஆக சர்வ வசியங்களையும் அடையலாம். எடுத்த வேலை இனிதே முடியும்.

செம்மரம்: இது அங்காரக கிரக சமித்தாகும். இதனால் ரண, ரோகங்கள் நீங்கும். தைரியம் பெருகும்.

தர்ப்பை: கேது பகவானுக்கு தர்ப்பை சமித்து மிகவும் பிடித்தமானதாகும். இது ஞான விருத்தியைத் தரும்.

கரும்பு: கரும்புத் துண்டுகளையாவது அல்லது கருப்பஞ்சாறையாவது கொண்டு ஹோமம் செய்தால் வரனுக்கு விரும்பிய கன்னிகையும், கன்னிகைக்கு விரும்பிய வரனும் கிடைப்பர். இதையும் கணபதி ஹோமத்தில் பயன்படுத்துவர்.

எள்: ஹோமத்தில் எள் போட்டு யாகம் செய்ய, பல ஜன்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும். தீராத கடன் தொல்லை தீரும்.

புங்க மரம்: இதன் சமித்து ஹோமம் வெற்றியைத் தரும்.

இலந்தை: இந்த சமித்தினால் ஹோமம் செய்ய, குடும்பம் இனிது வாழ வழி வகுக்கும்.

தேவதாரு: இதைக்கொண்டு ஹோமம் செய்ய, சகல தெய்வங்களும் வேண்டிய வரங்களைக் கொடுப்பார்கள்.

வல்லாரைக்கொடி: இதை ஆகுதி செய்தால் கல்வி சிறப்பாக வரும். ஞாபக சக்தி அதிகரிக்கும். சரஸ்வதி கடாட்சமும் ஏற்படும்.

சந்தன மரம்: இந்த சமித்தால் ஹேமம் செய்ய, மூதேவி முதலிய சகல பீடைகளையும் விலக்கி, லக்ஷ்மி கடாட்சம் ஏற்படும். சகல சம்பத்துடன் வாழ்வார்கள்.

வேங்கை: இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் பில்லி, சூன்யம், ஏவல், பிசாசு, பயம் ஓழியும்.

மகிழம்பூ: இதைக் கொண்டு ஹோமம் செய்தால் சகல துக்கங்களும் நிவர்த்தியடைந்து, சிக்கல்கள் அனைத்தும் தீரும். மனம் அமைதி பெறும்.

பூவரசு: இந்த சமித்து பூலோக அரச மரம் என்று வழங்கப்படுகிறது. அரசு சமித்து இல்லாத குறையை இந்த சமித்தினால் செய்யப்படும் ஹோமம் தரும் பலன் இதற்கும் உண்டு.

நவதானியங்கள்: அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தால் நவக்கிரக ஹோமம் செய்ய, கிரக தோஷங்கள் விலகும். வாழ்வில் சுபிட்சம் நிலவும்.

மஞ்சள்: முழு மஞ்சள் ஸ்ரீ வித்யா ஹோமத்துக்குச் சிறந்தது. சகல வியாதிகளை நீக்கும். அதோடு கல்வியும், செல்வமும் தரும்.

மா: சர்வ மங்களங்களையும் ஸித்திக்கும்.

பலா: சந்திர பகவானுக்கு மிக உகந்தது.

தாமரை புஷ்பம்: மகாலக்ஷ்மிக்கும், சரஸ்வதிக்கும் மிகவும் பிடித்தமானது.

மாதுளை குச்சி: அழகான வடிவமும், வசீகரமும் கிடைக்கும்.

நாயுருவி: மகாலக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.

எருக்கன்: எதிரிகள் இல்லாத நிலை உருவாகும்.

கருங்காலி: ஏவல், பில்லி, சூனியம் அகலும்.

புரசு: குழந்தைகளின் கல்வி வளர்ச்சி செழிக்கும்.

நொச்சி: காரியத்தடை விலகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com