சகல நலம் தரும் ராகுகால எலுமிச்சை தீப வழிபாடு!

சகல நலம் தரும் ராகுகால எலுமிச்சை தீப வழிபாடு!

துர்கையின் சன்னிதியில், ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாறு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதில் ஐந்து இழைகள் கொண்ட நூல் திரி போட்டு அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக்கூடாது. விளக்கினை ஜோடியாகத்தான் வைக்க வேண்டும். தீப ஒளி அம்மனை நோக்கியவாறு இருக்க வேண்டும்.

இந்த பூஜையின்போது, அம்மனுக்கு மல்லிகை பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ மட்டுமே சாத்த வேண்டும். அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால் அன்னை பெயரில் அர்ச்சனை செய்த பின்னரே விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பின்னரே மூன்று சுற்றுகள் வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். பின்னர் இருபது நிமிடங்கள் கோயிலில் அமர்ந்திருக்க வேண்டும். அப்பொழுது, துர்கை பாடல்கள் சொல்லியவாறு இருப்பது நன்று. அதன் பின்னர் கோயிலை விட்டு வெளியேறி விட வேண்டும். இது ராகுவால் உண்டான கஷ்ட நிவர்த்தி பூஜை என்பதால் நவகிரகம் சுற்றுவது கூடாது.

வீடு திரும்பியதும் பூஜை அறையில் ஒரு நெய் தீபம், ஊதுபத்திகள் ஏற்றி கற்பூர ஆராதனை செய்ய வேண்டும். வீட்டில் ஏற்றிய தீபம் அணையும் வரை, வெளியில் செல்லக் கூடாது. இவ்வாறு ஒன்பது வாரங்கள் செய்து வந்தால் வேண்டிய பலன் நிச்சயம் கிட்டும். வீட்டில் எலுமிச்சை விளக்கேற்றி வழிபடக் கூடாது.

எலுமிச்சை தீப வழிபாட்டின்போது கூற வேண்டிய துர்கா காயத்ரி மந்திரம்:

‘ஓம் காத்யாயனாய வித்மஹே

கன்யாகுமாரி தீமஹி

தன்னோ துர்கிப்ரசோதயாத்.’

எலுமிச்சைக்கு மிகப் பெரிய சக்தி இருப்பதால்தான் அது திரி சூலத்தில் ஒரு அங்கமாக இருக்கிறது. தீய சக்திகள் வீட்டில் நுழையாமல் தடுக்க எலுமிச்சையை இரண்டாக அறுத்து அதை வாசற்கதவின் இருபுறமும் வைப்பது வழக்கம். அதேபோல் கண் திருஷ்டி விலக எலுமிச்சை பழத்தை சுற்றிப்போடுவதும் வழக்கம். இப்படிப் பல அபூர்வ பலன்களைக் கொண்ட எலுமிச்சையால் துர்கா தேவிக்கு ராகுகாலத்தில் தீபம் ஏற்றும்போது பல பிரச்னைகள் தீர்கின்றன.

ஞாயிறு மாலை 4.30 முதல் 6.00 மணி வரை உள்ள ராகுகாலத்தில் அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால் தீராத நோய்கள் தீரும். செவ்வாய் கிழமை மாலை 3 முதல் 4.30 மணி வரை உள்ள ராகுகாலத்தில் அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால் குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் தீரும். வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை உள்ள ராகுகாலத்தில் இரண்டு எலுமிச்சை தீபம் ஏற்றி அம்மனை மனமுருகி வேண்டினால் சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com