திருவையாறில் தியாகப்ரம்மம் ஆராதனை!

திருவையாறில் தியாகப்ரம்மம் ஆராதனை!

மார்கழி மாதம் பகுள பஞ்சமியன்று ஸ்ரீ தியாகராஜரின் ஆராதனை விழா தஞ்சை மாவட்டம், திருவையாறில் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் சித்தியடைந்தது திருவையாறில்தான். தமது தலைசிறந்த சாகித்தியங்களால் கர்நாடக சங்கீதத்துக்கு சிறப்பும் பெருமையும் சேர்த்தவர் தியாகப்ரம்மம். இவர் 1767ஆம் ஆண்டு திருவாரூரில் ராமபிரம்மம் சீதம்மா தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். சிறு வயதிலேயே சமஸ்கிருத மொழி பயின்று அதில் தேர்ச்சி பெற்றார்.  பின்பு சோந்தி வெங்கடராமையரிடம் சங்கீதம் பயின்றார்.

ஒரு முறை நாரத முனிவர் சந்நியாசி வேடத்தில் இவருக்கு தரிசனமளித்து 'ஸ்வரார்ணம்' என்னும் சங்கீத கிரந்தத்தை பரிசாக அளித்து அனுக்ரஹம் செய்தார்.  அந்த கிரந்தத்தை ஆதாரமாகக் கொண்டு தியாகராஜர் சங்கீத இலக்கணங்கள் அற்புதமாக அமைந்த பல கிருதிகளை இயற்றினார்.

சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவுடன் இவர் கீர்த்தனங்கள் இயற்றத் தொடங்கினார். அபார ராம பக்தி கொண்ட தியாகராஜர் ஸ்ரீராமபிரான் மேல் எண்ணற்ற கீர்த்தனங்கள் இயற்றியிருக்கிறார். இவருடைய கீர்த்தனங்கள் பாவத்துடன் கேட்பவர் உள்ளத்தை உருக்கும் விதமாக அமைந்திருக்கும். எல்லாமே பக்தி ரசம் சொட்டும் கீர்த்தனங்கள்.

ஒரு முறை மகான் ஒருவர் இவரை ராம நாமத்தை 96 கோடி முறை ஜபிக்கும்படி கூறினார். அதன்படி இவர் 21 ஆண்டுகளில் 96 கோடி ராம நாமம் ஜபித்து முடித்தார்.  இதனால் இவர் வாழ்க்கையில் பல முறைகள் இவருக்கு ஸ்ரீ ராமர் தரிசனம் கிடைத்தது.

இவர் சிறு வயது முதலே தமது வீட்டில் ராம, சீதா, லட்சுமண விக்கிரங்களை பூஜை அறையில் வைத்து தினந்தோறும் சிரத்தையாக பூஜித்து வந்தார்.  இதை பிடிக்காத இவரது தமையனார் ஒரு நாள் இரவு இவர் பூஜித்து வந்த விக்கிரங்களை இவருக்குத் தெரியாமல் தூக்கிக்கொண்டு போய் காவிரி நதியில் வீசி எறிந்து விட்டார். தான் தினமும் வழிபாடும் விக்கிரங்களைக் காணாமல் நிலைகுலைந்துபோன தியாகராஜர் அவற்றைத் தேடி பித்துப் பிடித்தவர் போல் அலைந்தார். சில நாட்களுக்குள், ஸ்ரீராமபிரான் அருளால் விக்கிரகங்கள் இருக்குமிடம் தெரிந்து, அவற்றைக் கண்டெடுத்து மகிழ்ச்சியோடு வீட்டுக்குக் கொண்டு வந்து திரும்பவும் வழிபாட்டை ஆரம்பித்தார்.

இவர் தனது வாழ்க்கையில் பல திருத்தலங்களுக்கு யாத்திரையாகச் சென்று அங்கேயெல்லாம் கீர்த்தனங்கள் இயற்றினார். இதுபோல யாத்திரை செல்லும்போது ஒரு முறை இவர் திருடர்களிடம் அகப்பட்டுக்கொள்ள, ராம, லட்சுமணர்களே சேவகர்கள் வேடத்தில் வந்து திருடர்களை விரட்டி, இவரைக் காப்பாற்றினார்கள். இதுபோன்று இவரது வாழ்வில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன.

எண்ணற்ற கீர்த்தனங்களை இயற்றிய இவர், பிரகலாத பக்தி விஜயம், நவுகா சரித்திரம் முதலிய இசை நாடகங்களையும் இயற்றியுள்ளார். நாரத பஞ்சரத்தினம், ஸ்ரீரங்க பஞ்சரத்னம், லால்குடி பஞ்சரத்னம், திருவொற்றியூர் பஞ்சரத்னம், கோவூர் பஞ்சரத்னம் ஆகிய கிருதிகளையும் இவர் இயற்றியுள்ளார்.

வடவாறு, காவிரி, வெட்டாறு, வெண்ணாறு, குடமுருட்டி என்னும் ஐந்து நதிகள் பாயும் ஊரானதால் அந்தத் தலத்துக்கு, ‘திருவையாறு’ என்று பெயர் வந்தது. 1847ஆம் வருடம் ஜனவரி 6ஆம் தேதி சித்தியடைந்த ஸ்ரீ தியாகராஜருக்கு திருவையாறில் ஒரு சமாதி அமைந்தது. அந்த சமாதியருகே முதன் முதலில் பெங்களூர் நாகரத்தினம்மா என்னும் கர்நாடக இசைப் பாடகி ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்காக ஒரு கோயில் கட்டி, 1940ல்   தியாகராஜ ஆராதனையை தொடங்கி வைத்தார். 1949 முதல் பஞ்சரத்ன கிருதிகளை கோரஸாகப் பாடி ஸ்ரீ தியாகராஜரை ஆராதிக்கும் வழக்கம் ஏற்பட்டது. இந்த ஆராதனை விழா தென்னிந்தியாவின் பிரசித்தி பெற்ற இசை விழாவாக விளங்குகிறது. தெலுங்கு, கன்னட மாதங்களில் மார்கழி மாதத்தை, 'புஷ்ய' என்று அழைக்கிறார்கள். ஆதலால் இது, 'புஷ்ய பகுள பஞ்சமி ஆராதனை விழா' என்றும் அழைக்கப்படுகிறது.

காலை எட்டு மணியளவில் முதலில் நாதஸ்வர வித்வான்களின் சேர்ந்திசையை அடுத்து, 'சேதுலாரா' என்னும் பைரவி ராகக் கீர்த்தனத்தை புல்லாங்குழல் வித்வான்கள் சேர்ந்து இசைப்பார்கள். அப்பொழுது ஸ்ரீ தியாகராஜர் விக்கிரகத்துக்கு அபிஷேகம் ஆரம்பிக்கப்படும். தொடர்ந்து எதிரெதிர் வரிசைகளில் அமர்ந்திருக்கும் ஆண்கள், பெண்கள் என்று அனைத்து சங்கீத வித்வான்களும் சேர்ந்து 'பஞ்ச ரத்ன' கீர்த்தனங்கள் என்று ஸ்ரீ தியாகய்யர் இயற்றிய ஐந்து பாடல்களை கோரஸாகப் பாடுவார்கள். இவை, 'ஜெகதாநந்தகா' என்னும் நாட்டை ராகப் பாடல், 'துடுகு கல' என்னும் கௌள ராகப் பாடல், 'சாதிஞ்சனே' என்னும் ஆரபி ராகப் பாடல், 'கனகன ருசிரா' என்னும் வராளி ராகத்தில் அமைந்த பாடல், கடைசியாக 'எந்தரோ மஹானுபாவுலு' என்னும் ஸ்ரீராகப் பாடல்கள் ஆகும். இந்த வரிசையில் பஞ்சரத்ன கீர்த்தனங்கள் பாடப்படுவது ஒரு பாரம்பரியமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வு நேரலையாக பல வருடங்களாக பொதிகை தொலைக்காட்சியால் ஒளிபரப்பப்பட்டு வருவதால் ஆராதனை விழாவுக்குப் போக முடியாத சங்கீத ரசிகர்களும் வீட்டிலிருந்தபடியே பஞ்சரத்ன கீர்த்தனங்களை கூடவே பாடி
ஸ்ரீ தியாகராஜர் என்னும் ஒப்பற்ற மகானுக்கு இசை அஞ்சலி செலுத்தலாம்.

இந்த வருடம் ஸ்ரீ தியாகராஜர் சித்தியடைந்த பகுள பஞ்சமி திதி 11.01.2023 அன்று அனுஷ்டிக்கப்பட உள்ளது. ஸ்ரீ தியாகப்ரம்ம மஹோத்ஸவ குழுவால் கொண்டாடப்படும் இந்த விழா 06.01.23 அன்று ஆரம்பித்து, 11.01.2023 அன்று ஆராதனை விழாவோடு நிறைவு பெறுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com