அருந்ததி யார்? திருமணங்களில் தம்பதியர் அருந்ததியைப் பார்ப்பது ஏன்?

அருந்ததி யார்? திருமணங்களில் தம்பதியர் அருந்ததியைப் பார்ப்பது ஏன்?

ந்து மத திருமண சடங்குகளில் பல்வேறு விதமான சடங்குகள் சம்பிரதாயங்கள் உள்ளது. இதில் ஒன்றுதான் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது. இவைகள் ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் உள்ளதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. அருந்ததி பார்ப்பதின் பின்னணி என்ன? அதற்குமுன் அருந்ததி என்பவர் யார் என்று பார்ப்போம்.  

    புராண காலத்தில் சந்திரபாகா எனும் நதிக்கரையில் தாபஸாரண்யம் என்ற ஓர் ஆசிரமம் இருந்தது. அந்த ஆசிரமத்தில் மேதாதிதி என்ற முனிவர் வசித்து வந்தார். அவர் ஓர் பெரும் வேள்வி நடத்தினார். அவ்வேள்வியின் முடிவில் வேள்வித் தீயிலிருந்து ஒரு பெண் குழந்தை தோன்றியது. முனிவரான மேதாதிதி அக்குழந்தையை அன்புடன் வளர்த்து வந்தார். விளையாட்டில்கூட தர்மத்தை காப்பதில் குறியாய் இருந்த அக்குழந்தைக்கு அருந்ததி எனப் பெயரிட்டார் மேதாதிதி.

      அருந்ததிக்கு ஐந்து வயதானபோது  பிரம்ம தேவர்  மேதாதிதி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தார். முனிவரிடம்,  “அருந்ததி கல்வி கற்கும் வயதை அடைந்திருக்கிறாள். ஆகையால் இவளை இப்பொழுதே நல்லொழுக்கமுள்ள பெண்களிடம் அனுப்ப வேண்டும். அவர்களிடமிருந்தே இவள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியைக் கற்க வேண்டும்” என்றார்.

     இதைக் கேட்ட முனிவர், குழந்தையிடம் உள்ள பேரன்பினால் குழந்தையைப் பிரிய மனமில்லாதவராக சற்று தயங்கினார். 

இதைக் கண்ட பிரம்மன் முனிவரை நோக்கி “பெண்களுக்கு உகந்த கல்வியைப் பெண்கள்தான் கற்பிக்கமுடியும். பெண்களுக்கு இயற்கையாக அமைந்துள்ள நாணம், அச்சம், பக்தி, பொறுமை முதலிய நற்குணங்களை அவர்களால்தான் சொல்லிதர முடியும். உங்கள் ஆசிரமத்தில் பெண்கள் கிடையாது. ஆகையால்  

இக்குழந்தையை சாவித்ரியிடம் அனுப்பு” என்று சொன்னார். முனிவர் பிரம்மாவின் கட்டளைப்படி அருந்ததியை அழைத்துக்கொண்டு சூர்யலோகம் சென்று சாவித்ரி தேவியை சந்தித்தார். 

      சாவித்ரி தேவியும் அருந்ததியை அழைத்துக்கொண்டு மேருமலைக்குச் சென்றார். அங்கே சரஸ்வதி, காயத்ரி முதலிய தேவிகளும் வந்திருந்தார்கள். முனிவர் அவர்களை  வணங்கினார். பிறகு  “தேவியரே இவள் என் பெண் அருந்ததி. பிரம்மனின் கட்டளைப்படி இவளை உங்களிடம் கல்வி கற்க அழைத்து வந்துள்ளேன். இவள் தங்களிடமே இருக்கட்டும். தாங்கள் இவளுக்கு உசித்தமான கல்வியைக் கற்பிக்க வேண்டும்” என்றார்.

    அதற்கு அவர்கள்  “முனிவரே பகவான் விஷ்ணுவின் அருளால் இவள் முதலிலேயே ஒழுக்கமுள்ளவளாக இருக்கிறாள்.

ஆனாலும் பிரம்மனின் கட்டளைப்படி இவளை எங்கள் அருகில் வைத்துக்கொள்கிறோம். இவள் முன் ஜென்மத்தில் பிரம்மனின் பெண்ணாக இருந்தாள். உங்களது தவவலிமையாலும், ஈசனருளாலும் இவளை நீங்கள் மகளாகப் பெற்றீர்கள். இவளால் உலகத்திற்கு அநேக நன்மைகள் உண்டாகும். பெண் உலகத்திற்கே ஓர் எடுத்துக்காட்டாக விளங்கப்போகிறாள்” என்றார்கள்.

    முனிவர் தம் குழந்தை அருந்ததியை அவர்களிடம் விட்டுச் சென்றார். அருந்ததியும் அத்தேவியர்களுக்கு பணிவிடை செய்தும், கல்வி கற்றும் வந்தாள். சில ஆண்டுகள் சென்றன. அருந்ததி திருமணப் பருவத்தை அடைந்தாள். ஒரு நாள் அருந்ததியின் ஆசிரமம் அருகே தற்செயலாக வந்த வசிஷ்ட முனிவர் அருந்ததியை சந்தித்தார். அருந்ததி நாணமடைந்து  உள்ளே ஓடி விட்டாள். 

      இதையறிந்த தேவியர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் தேவர்களும் வந்தார்கள். மேதாதிதி முனிவர் வசிஷ்ட முனிவருக்கு மகள் அருந்ததியைத் தானம் செய்தார். தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். மும்மூர்த்திகளும், மணப்பந்தலில் தம்பதியினரை உட்காரவைத்து நீராட்டினார்கள். அந்நீரே கோமதி, சரயூ முதலிய ஆறுகளாக பெருகிற்று. 

திருமண காலத்தில் பிரம்ம தேவர் மிக அழகிய விமானமும், விஷ்ணு அழியாப் பதவியும், சிவபெருமான் நீண்ட ஆயுளையும் அளித்தார்கள். வசிஷ்டர், தம் மனைவியுடன் தமக்கென அளிக்கப்பட்ட சப்தரிஷி மண்டலத்தில்இன்றும்  இருந்து அருளுகிறார். அவர் அருகில் மிகச் சிறு நட்சத்திரமாக அருந்ததி தேவி விளங்குகின்றாள். (வானசாஸ்திரம்படி மிஜார் எனும் விண்மீன் வசிஷ்டராகவும் ஆல்கர் விண்மீன் அருந்ததியாகவும் கருதப்படுகிறது.)

             ஆம். கணவருக்காக சேவை செய்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றவள் அருந்ததி.   சப்தரிஷி மண்டலத்தில் தம் கணவரை விட்டுப் பிரியாமல் இடம் பெற்று இருக்கும் தேவி அருந்ததி ஒருவள்தான். ஒரு சமயம் அக்னி தேவனுடைய மனைவி ஸ்வாஹாதேவி,  அருந்ததியைப்போல உருவம் எடுக்க விரும்பினாள். எவ்வளவு முயற்சி செய்தும் அருந்ததியைப் போல உருவம் எடுக்க முடியவில்லை.    தன் தோல்வியை ஒப்புக்கொண்ட  ஸ்வாஹாதேவி அருந்ததியிடம் சென்று கைகூப்பி “தேவி நீங்கள் ஒருவர்தான் பதிவிரதா தர்மத்தைச் சரியான முறைப்படி கடைபிடிக்கிறீர்கள். தங்களைப் போன்ற உத்தம பத்தினியை நான் இதுவரை பார்த்ததே இல்லை. எந்தப்பெண் திருமண காலத்தில் அக்னி, அந்தணன் இவர்களுக்கு முன்னால் கணவனின் கையைபிடிக்கும் சமயம் உங்களை நினைக்கிறாளோ, அவள் நீண்டகாலம் கணவனுடன்சுகத்தையும், புத்திரனையும், செல்வத் தையும் அடைவாள்” என்று உறுதியுடன் சொன்னாள்.

  அக்னிதேவனின் மனைவியல்லவா? சொல்வது பலிக்குமே. இதனால்தான் திருமணக்காலத்தில் ஒழுக்கத்துக்கு சாட்சியான அருந்ததியைப் பார்க்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள்.

     பகுத்தறிவு பெருகிவிட்ட இந்தக் காலத்தில் இதுபோன்ற கதைகளை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்வதில்லை என்றாலும், முன்னோர் வகுத்துச் சென்ற நியதிகளுக்கு நிச்சயம் ஒரு அர்த்தமிருக்கும் என்று நம்புவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com