
சென்னை மடிப்பாக்கத்தில் திமுக வட்டச் செயலாளர் செல்வம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க கூடுதல் கமிஷனர் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடந்து வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த 188வது வார்டு திமுக வட்ட செயலாளர் செல்வம். இவரது மனைவி தற்போது நடக்கவுள்ள சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட மனு செய்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் செல்வம் தன் நண்பர்களூடன் பேசியபடி அலுவலக வாசலில் நின்றிருந்தபோது திடீரென 3 பைக்குகளில் வந்த 6 பேர் கும்பல் செல்வத்திற்கு சால்வை அணிவிப்பது போல் பாவனை செய்து, பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பினர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும் கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இந்நிலையில் செல்வத்துக்கு ரியல் எஸ்டேட் தோழிலில் பலருடன் விரோத இருந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், கொலையில் நேரடியாக ஈடுபட்டவர்கள் சென்னையைச் சேர்ந்த கூலிப்படையினர் என்பதை தனிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர். அவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக களம் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
அந்த கூலிப்படையினர் பிடிபட்டபின் விசாரணை நடத்தி, அவர்களை அவர்களை ஏவியவர்கள் யார் என்று கண்டறிந்து விரைவில் கைது செய்வோம் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.