அடித்து நொறுக்கிய ஹர்திக் பாண்டியா!

அடித்து நொறுக்கிய ஹர்திக் பாண்டியா!

-கே. சத்ய நாராயணன்

சிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று (ஆகஸ்ட் 28)பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அனைவரும் மிகவும் எதிர்பார்த்து இந்தியா vs  பாகிஸ்தான் லீக் போட்டி நேற்றிரவு 7:30 மணிக்கு துபாய் கிரிக்கெட் மைதானத்தில் அரங்கேறியது.

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்தார். மேலும், இந்திய அணியில் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கும் வேகப்பந்துவீச்சாளராக அவேஷ் கானும் ஆடுவார்கள் என அறிவித்தார்.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் களமிறங்கினர். இதில் பாபர் அசாம் 10 ரன்னிலும், அடுத்து வந்த ஃபகார் ஜமான் 10 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.இதன்பிறகு தொடக்க வீரர் முகமது ரிஸ்வானுடன் ஜோடி சேர்ந்த இப்திகார் அகமது ஒரு சிக்ஸர் 2 பவுண்டரிகளை விரட்டி 22 ரன்னில் அவுட் ஆனார்.

பின்னர்  முகமது ரிஸ்வான் 42 பந்துகளில் ஒரு சிக்ஸர் 4 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து ஹர்டிக் பாண்டியா வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த வீரர்கள் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 147 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். .

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 43 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் புவனேஷ் குமார் 4  விக்கெட்டுகள், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகள், அவேஷ் கான் ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

அடுத்ததாக பேட்டிங்கில் களமிறங்கியது இந்திய அணி! மொத்தம் 148 ரன்கள் என்ற இலக்கில் இந்திய அணியின் கே..எல் ராகுல் 'டக் அவுட்' ஆகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

இதன்பிறகு களத்தில் இறங்கிய விராட் கோலி அதிரடியாக சிக்ஸர், பவுண்டரி என பந்துகளை தெறிக்கவிட்டார். அவருடன் ஜோடி சேர்ந்த ரோகித் தனது பங்கிற்கு ஒரு சிக்ஸரை விளாசினார். மீண்டும் அடுத்த பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதையடுத்து விராட் கோலி 35 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா – சூர்யகுமார் யாதவ் அதிரடி கலந்த நிதானத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

மேலும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் ரேட்டை உயர்த்தினர். இந்நிலையில் சூர்யகுமார் 18 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் – அவுட் ஆனார்.

இதன்பிறகு களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்தார். மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த ஜோடி 50 ரன்களுக்கு மேல் பர்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்திய அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜா (35) போல்ட் -அவுட் ஆனார்.

ஜடேஜாவின் விக்கெட்டுக்கு பிறகு ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.அந்த தருணத்தில் நிதானமாக முகமது நவாஸின் 4வது பந்தை சந்தித்த ஹர்திக் பாண்டியா தனது ஸ்டைலில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு ஆட்டத்தை முடித்து வைத்தார்.

இறுதியில், இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அசத்தல் வெற்றியை ருசித்தது. மேலும், டி-20 உலக கோப்பையில் கண்ட தோல்விக்கு பதிலடியை கொடுத்து மிரட்டியுள்ளது.

இந்த ஆட்டத்தில் பவுலிங், பேட்டிங்கில் ஜொலித்த ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகன் விருதைச் தட்டிச்சென்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com