
தமிழகத்தில் இந்து சமய அறநிலயத்துக்கு உட்பட்ட கோயில்களில் பயன்படுத்தப்படாத தங்க நகைகளை உருக்கி பிஸ்கட்டுகளாக மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு அறிவித்தது. அதையடுத்து தமிழக கோயில்களில் உள்ள தங்கத்தை உருக்குவது தொடர்பாக, அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நகைகளைக் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிப்பது தொடர்பான நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
–இவ்வாறு அவர் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்குத் தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:
கோயில் நகைகளைக் கணக்கெடுக்கும் பணிகள் தொடரலாம். ஆனால், நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது.
–இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.