
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அந்த மசோதாவை ஏற்க மறுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அதை திருப்பியனுப்பினார். இந்த மசோதா நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மாறாக உள்ளதாக கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இதனை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை;
தமிழகத்தில் நீட் விவகாரம் தொடர்பான அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நாளை ) காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் இருக்கும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும்.
நீட் விலக்கு மசோதா குறித்து ஆளுநரின் கருத்து தமிழ்நாட்டு மக்களால் ஏற்கத்தக்கவை அல்ல. சட்டத்திற்கு அடிப்படையான கூறுகள் தவறானவை என ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஏற்க கூடியவை அல்ல. நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் அனைவரிடமும் கருத்து ஒற்றுமை நிலவி வருகிறது.இந்த நிலையில், நீட் மசோதா குறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்பட உள்ளது.
நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு முன்னெடுக்கும்.
-இவ்வாறு தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.