

சிரையா (Chiraiya) என்ற சொல்லுக்கு பறவை என்று அர்த்தம். பெண்கள் அடிமையாக இருக்கக்கூடாது. தன் சிறகுகளை விரித்து சுதந்திரமாகப் பறக்க வேண்டும் என்று கருத்து சொல்லி இருக்கிறார்கள்.
இது மொத்தம் 6 எபிசோடுகள் கொண்டது. ஒவ்வொரு எபிசோடும் 30 நிமிடங்கள் ரன்னிங் டைம். ஆக மொத்தம் 3 மணி நேரம் ஒதுக்கினால் ஒரே அமர்வில் பார்த்து விடலாம்.
ஹிந்தி வெப் சீரிசான இது தமிழ் டப்பிங்கில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் காணக்கிடைக்கிறது.
நாயகி ஒரு குடும்பத்தில் மாமியார் மெச்சிய மருமகளாய் இருக்கிறார். கல்வி அறிவு குறைவு. கணவர் மிக அன்பானவர். மாமியாரும் அனுசரணையாய் நடந்து கொள்பவர்.
நாயகியின் கணவருக்கு ஒரு தம்பி இருக்கிறான். அவன் சின்னப் பையனாக இருந்த போதே நாயகி தான் அண்ணியாக இல்லாமல் அம்மா ஸ்தானத்தில் இருந்து வளர்த்து வருகிறாள்.
இப்போது அவனுக்குப் பெண் பார்க்கும் படலம் நடக்கிறது. நாயகிக்குப் பெண்ணைப் பார்த்ததும் ஒரு பயம் வருகிறது. ஏனெனில் அவள் மெத்தப் படித்தவள். அவள் இந்த வீட்டுக்கு மருமகளாய் வந்தால் தனக்கு மதிப்பு இருக்காது என நினைக்கிறாள். இதனால் பெண் அழகாக, லட்சணமாக இருந்தாலும் மிகவும் கிளாமராக உடை அணிந்திருக்கிறாள் என்று சாக்கு சொல்லி பெண்ணை நிராகரிக்க முயற்சிக்கிறாள்.
ஆனால் நாயகியின் கணவனின் தம்பி கெஞ்சுகிறான். அதெல்லாம் சரி பண்ணிக்கலாம். நீங்க ஓக்கே சொன்னால் போதும் என்று நாயகியின் மனதை மாற்றி அந்தப் பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறான்.
திருமணம் நடக்கும் நாளில் மணப்பெண்ணுக்கு உடல் நிலை சரி இல்லை. அன்று இரவு மணப்பெண் தன் கணவனிடம் இன்று தாம்பத்யம் வேண்டாம் என்கிறாள். ஆனால் கணவன் கேட்கவில்லை. வலுக்கட்டாயமாக உறவு கொள்கிறான். இது மணப்பெண்ணுக்குப் பிடிக்கவில்லை.
இது தொடர்கிறது. கணவன் ஆக இருந்தாலும் நோ மீன்ஸ் நோ தான். பெண்ணின் சம்மதம் இன்றி ஆண் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்பது மணப்பெண்ணின் நிலைப்பாடு.
நாயகியிடம் தன் நிலையைக் கூறுகிறார். இதற்குப் பின் நிகழும் சம்பவங்கள் என்ன? குடும்பம் எப்படி மணப்பெண்ணை எதிர் கொண்டது? மணப்பெண் தன் கணவனை சரிப்படுத்தினாரா? என்பது மீதி திரைக்கதை.
நாயகி ஆக குடும்பத் தலைவி ஆக திவ்யா தத்தா சிறப்பான நடிப்பு. குடும்பப்பாங்கான தோற்றம். ஆரம்பத்தில் வில்லி மாதிரி தோன்றினாலும் பின் நாயகி ஆகவே தொடர்கிறார்.
மணப்பெண் பூஜாவாக வருபவர் அழகு, இளமை, நடிப்பு மூன்றிலும் மனம் கவர்கிறார்.
புது மாப்பிள்ளை ஆக வருபவருக்குக் கிட்டத்தட்ட வில்லன் ரோல். கச்சிதமாக செய்திருக்கிறார்.
சபாஷ் டைரக்டர்
Marital Rape என்ற கான்செப்ட்டை துணிச்சலாக எடுத்துக் காட்சிப்படுத்திய விதம்.
பெண் என்பவள் ஒரு பிராப்பர்ட்டி கிடையாது என்பதை உணர்த்தும் அழுத்தமான சம்பவங்கள், வசனஙகள்.
கணவன் மீது வரதட்சணைக் கொடுமை வழக்கு பொய்யாகப் பதியலாம் என யோசனை சொல்லும்போது பூஜா கேரக்டர் கேட்கும் கேள்வி அருமை. சட்டப்படி இந்த மாதிரி ஆண்களை தண்டிக்க சட்டம் ஏன் இல்லை?
நாயகியின் கணவர் கூட தன்னை முற்போக்கு வாதியாகக் காட்டிக் கொண்டாலும் ரியல் லைபில் இன்னொரு முகம் வைத்திருக்கிறான் என்று காட்டிய விதம்.
லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்
பின் பாதியில் டிவி சீரியல் போல நகர்வதைத் தவிர்த்திருக்கலாம். அசாத்திய பொறுமை தேவை.
புது மணப்பெண்ணின் அப்பா கூட அவளுக்கு ஆதரவில்லை எனக்காட்டி இருப்பது ஓவர். எந்த அப்பாவாவது தன் மகளுக்கு எதிராக நடப்பாரா?
ஒட்டு மொத்த ஆண் வர்க்கமே வில்லன் தான் என்பது போலக் கேரக்டர்களை வடிவமைத்திருக்கிறார்கள்.
உடல் நிலை சரி இல்லாதபோது மணப்பெண் தாம்பத்யத்திற்கு மறுப்பது சரி. எப்போதுமே விருப்பமே இல்லை என்பது போல் காட்சிப்படுத்தியது ஏனோ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்: 18+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஆண்களுக்குப் படிப்பினை ஊட்டும் கதை தான். ஆனால் பெண்களால் மட்டும் தான் பொறுமையாகப் பார்க்க முடியும்.