நடிகர் வீட்டில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான லேப்டாப் மற்றும் செல்போன்கள் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்றவரும், நடிகருமான ஜெயச்சந்திரன் வடபழனி அழகர் பெருமாள் கோயில் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று இரவு ஜெயச்சந்திரன் தனது குடும்பத்துடன் வீட்டில் உறங்கிய நிலையில் இன்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டிலிருந்த 1.5 லட்சம் மதிப்பிலான லேப்டாப் மற்றும் செல்போன்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக நடிகர் ஜெயச்சந்திரன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில் கடந்த ஆறு நாட்களுக்கு முன்பாக கேகே நகரில் இருந்து தனது வீட்டை மாற்றிக் கொண்டு வடபழனியில் வாடகைக்கு வந்ததாகவும், நேற்று இரவு உறங்கும் போது வெளிக்கதவை தாழிட மறந்ததாகவும், அதன் பின்னர் மர்ம நபர் பொருட்களை திருடி சென்றிருக்க வாய்ப்பிருப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
புகாரின் பேரில் வடபழனி போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடுராத்திரியில் வீடு புகுந்து நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.