விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பான கதை களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. 4 சகோதரர்களுக்கும் திருமணமாகி அனைவருக்கும் குழந்தை பிறந்த நிலையில், கூட்டு குடும்பத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த சீரியல் இடம்பெற்று வருகிறது.
வரிசையாக வாரம் வாரம் ஒவ்வொருவருக்கு ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட்டு பிரசவ வலி வந்துவிடுகிறது. ஒரே நேரத்தில் 3 மருமகள்களும் பிரசவமானவுடன் பலரும் கலாய்த்து தள்ளினர். இந்த நிலையில் ஒவ்வொரு வாரமாக வரிசையாக குழந்தை பிறந்து வருகிறது. 2 வாரங்களுக்கு முன்பு முல்லைக்கு விபத்து ஏற்பட்டு குழந்தை பிறந்தது. கடந்த வாரம் ஐஸ்வர்யாவுக்கு வலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது.
இந்த வாரம் இன்னும் சற்று விறுவிறுப்பாக தனத்திற்கு குழந்தை பிறக்கவுள்ளது. தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனால் மீனா, முல்லை, தனம் என மூவரும் வீட்டிற்கு தெரியாமல் திட்டம் தீட்டி போலியான காரணங்களை கூறி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவுள்ளனர்.
இந்த நிலையில் இதற்கான பரபரப்பு ப்ரோமோ வெளியாகியுள்ளது. தனத்தை மருத்துவமனையில் சேர்த்துவிட்டது போன்றும், மூர்த்தியை அனைவரும் அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்க வைக்க முயற்சி செய்வது போன்றும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் தனம் நல்லபடியாக குணமடைய வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் மூர்த்தி சம்மதிப்பாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.