
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். ரசிகர்களால் செல்லமாக சிம்பு, STR என்று அழைக்கப்படுகிறார் சிலம்பரசன். சிம்பு என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த அளவிற்கு சிம்புவின் பெயரை வைத்து ஏகப்பட்ட பிரச்சனைகள் கிளம்பும். சிம்புவின் நடவடிக்கைகளால், பல வருடங்களாக அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் தனது வேலைகளில் முழுகவனத்தையும் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் சிம்பு இணைந்து பணியாற்ற உள்ளதாகவும், படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ படப்பிடிப்பின் போது லீக்கான புகைப்படம் இணையத்தையே கலக்கியது. அதன் பிறகு வெற்றிமாறனே தன்னுடைய அடுத்த படம் சிம்புவுடன் தான் என அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த புகைப்படத்தில் லுங்கி கட்டிக்கொண்டு சிம்பு மிகவும் ஒல்லியான தோற்றத்தில் காணப்பட்டர்.
இந்த படத்திற்காக சிம்பு 10 நாட்களில் 10 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் இளமையான தோற்றத்தில் ஒரு போர்ஷன் இருப்பதால் அதற்காக சிம்பு உடல் எடையை குறைத்து இந்த கெட்டப்பிற்கு மாறி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்றது. இந்த படத்தில் சிம்பு இளமை மற்றும் முதுமை தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் 18 வயது இளைஞராக நடிப்பதற்காக சிம்பு தன் உடல் எடையைக் கணிசமாகக் குறைத்திருந்தார்.
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான 'தக் லைஃப்' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி, பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதனால் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கும் சிம்பு, தனது 49வது படத்தில் வெற்றிமாறனுடன் இணைகிறார்.
மேலும் இப்படம் வடசென்னை யூனிவெர்சில் இருக்கும் என்று வெற்றிமாறன் தெரிவித்ததையடுத்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. STR- வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் நெல்சன் திலீப்குமார் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கிறன. மேலும் இந்த படத்தில் சிம்பு உடன் நடிக்க மணிகண்டன், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே இப்படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதால் படப்பிடிப்பு பணிகள் வேகமாக தொடங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வெற்றிமாறன் வடசென்னை 2 படத்தை எடுக்க இருக்கின்றார். சிம்புவிற்கு ஏகப்பட்ட படங்கள் வரிசையில் இருப்பதால் இப்படத்தை விரைவில் முடிக்க படக்குழு தயாராகி வருகிறது.