நாம் அன்றாடம் பொதுவெளியில் பேசும் அரசியல் குற்றங்ககளை வைத்து அதை சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் 'மாறன்' படத்தில் சொல்லிருக்கிறார் கார்த்திக் நரேன்.
பத்திரிகை நிருபரான ராம்கி ஒரு "கல்வி தந்தை" நடத்தும் பள்ளியின் பின்புலத்தில் உள்ள குற்றத்தை செய்தித்தாளில் வெளிக்கொண்டுவர முயற்சிக்கிறார். இந்த முயற்சியில் ராம்கி கொல்லப்படுகிறார். இதை பார்க்கும் சிறு வயது மகன் தனுஷ் பின்னாளில் தானும் பத்திரிகையாளர் ஆகிறார்.
மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை வைத்து தவறான வழியில் தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்கும் அரசியல்வாதி சமுத்திரக்கனியின் திட்டங்களை மீடியாவில் அம்பலபடுத்துகிறார்.இதனால் கோபமுறும் சமுத்திரகனி தனுஷிற்கு பல்வேறு பிரச்சனைகளை தருகிறார்.
ஒரு கட்டத்தில் தனுஷின் தங்கை எரித்து கொலை செய்யபடுகிறார்.
ஆனால் கொல்லப் பட்டது தனது தங்கை அல்ல என்று பின்னர் தெரிய வருகிறது.
கிளைமாக்ஸ் வரை பரபரப்புடன் கதையை நகர்த்தி இருக்கிறார் டைரக்டர்.படத்தின் முதல் பாதி காதல், செண்டிமெண்ட் என்று நகர்ந்ந்தாலும் பின் பாதியில் வரும் ட்விஸ்ட் ஓரளவு கை தருகிறது. தனுஷ் காதல், துள்ளல், செண்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்து எக்ஸ்பிரஷனிலும் அசர வைக்கிறார்.மாளவிகா மோகனன் நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்துஇருக்கிறார்.ஸ்மருதி நம் வீட்டு தங்கையை நினைவு படுத்தி விடுகிறார். சமுத்திரக்கனி அட்வைஸ் செய்யாமல் வில்லனாக பயமுறுத்துகிறார். அமீர் சில காட்சிகள் வந்தாலும் மனதில் நிற்கிறார்.
ஜிவி பிரகாஷ் இசை பெரிய பலத்தை படத்திற்கு தரவில்லை. திரைக்கதையை வலுவாக கட்டமைத்து, தேவையற்ற காட்சிகளை நீக்கி இருந்தால் கார்த்திக் நரேனுக்கு இது இன்னொரு 'துருவங்கள் பதினாறாக' அமைந்து இருக்கும்.
மாறன் -நேர்மையான பத்திரிகையாளர்களுக்கு சல்யூட்! – ராகவ் குமார்.