ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட '2018' படம்!

2018 movie
2018 movie
Updated on

கேரளாவில் 2018ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘2018’ என்ற மலையாள திரைப்படம், இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது போட்டிக்கு நேரடியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஜூட் ஆந்தணி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் ‘2018’. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். நோபின் பால் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 2018-ல் கேரளா சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் 2018 படம் தமிழ், தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படம் ரூ.200 கோடி வசூலை செய்த முதல் மலையாள படம் என்ற பாராட்டை பெற்றது.

96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவு அடுத்த ஆண்டு மார்ச் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவிலிருந்து சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவின் போட்டிக்கு மலையாள படமான ‘2018’ அதிகாரபூர்வமாக அனுப்பிவைக்கப்பட உள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தேர்வுக்குழுவின் தலைவரான கிரீஷ் காசரவள்ளி பேசுகையில், “காலநிலை மாற்றம் தொடர்பான பொருத்தமான கதைக்கருவுடன், சமூகத்தின் வளர்ச்சியை புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘2018’ திரைப்படம் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகியுள்ளது” எனத் தெரிவித்தார். கிரீஷ் காசரவள்ளி தலைமையிலான 16 பேர் கொண்ட குழுவினர் இந்தப் படத்தை அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுத்துள்ளனர்.

தி கேரளா ஸ்டோரி, ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி, மிஸ்டர் சாட்டர்ஜி விஎஸ் நார்வே, பாலகம் (தெலுங்கு), ஆகஸ்ட் 16, 1947, வால்வி (மராத்தி), பாப்லியோக் (மராத்தி) உள்ளிட்ட படங்கள் பரிந்துரைப் பட்டியில் இருந்த நிலையில் 2018 திரைப்படத்தை இந்திய திரைப்பட கூட்டமைப்பினர் தேர்வு செய்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com