

கிட்டு இயக்கத்தில், இசக்கி கார்வண்ணன், அபி நட்சத்திரா நடித்துள்ள படம் ஆட்டி. இப்படத்தை இசக்கி கார்வண்ணனே தயாரித்து உள்ளார்.
1970 களின் மதுரை மாவட்டத்தில் உள்ள கோடை மலை கிராமம். இங்கே பல பழங்குடி மக்கள் தங்களது கலாச்சாரத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்த ஊரில் டிரான்ஸ்பர் கிடைக்க பெற்று செல்கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன். இவர் அநீதிகளை பொறுத்துக் கொள்ள மாட்டார். தவறு செய்பவர்களை என்கவுண்டர் செய்து விடுவார். இந்த சூழ்நிலையில் இதே கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் மதுரையில் இருந்து பணிக்காக வருகிறார். அவர் பணியில் சேர்ந்த ஓரிரு நாட்களில் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். இதை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் இசக்கி பல இடங்களில் முயற்சி செய்து பார்த்தும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. மதுரைக்கு சென்று ஒரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்யும் போது இப்போது நடந்துள்ள கொலைக்கும் 150 வருடத்திற்கு முன் நடந்த சில சம்பவங்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்று கண்டுபிடிக்கிறார். அது என்ன? என்று இந்த படம் சொல்கிறது.
அழகான கொடைக்கானல் மலை கிராமங்கள், இயற்கையோடு சேர்ந்து வாழும் மக்கள், ஒரே பள்ளி, ஒரு போலீஸ் ஸ்டேஷன், ஒரு தபால் நிலையம் என்று ஒரு அழகான மலை கிராமத்தை கண் முன் கொண்டு வந்து விடுகிறார்கள். படம் ஆரம்பத்திலிருந்து ஒரு வித்தியாசமான கதாபாத்திரங்கள், சவுண்ட் எபெக்ட், ஒரு அமானுஷ்ய மலை கிராமம் என்று நகர்கிறது .
ஒரு கொலை நடந்த பிறகு பரபரப்பு இன்னும் கூடும் என்று நாம் எதிர்பார்த்தால் நமக்கு ஏமாற்றமே வருகிறது. கொலை செய்யப்பட்டு ஒரு சில காட்சிகளிலேயே கொலைக்கான காரணம் தெரிந்து விடுவதால் அதன் பிறகு பார்ப்பதற்கு சுவாரசியம் குறைந்து விடுகிறது.
படத்தில் நாம் ரசிக்கும்படி சில விஷயங்கள் உண்டு. முதலாவது ஒளிப்பதிவு. சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவில் கொடைக்கானல் மலைகளும் தேயிலை தேயிலை எஸ்டேட்டும் நம்மிடையே பேசுகின்றன. சீசனின் பின்னணி இசை ஒரு த்ரில்லர் அனுபவத்தை தருகிறது. இசக்கி கார்வண்ணன் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டராக, அழுத்தமான முகத்தை வைத்துக்கொண்டு, நன்றாக நடித்துள்ளார். இவர் நடிப்பை பார்க்கும் பொழுது தமிழ்நாட்டில் உள்ள சில என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்கள் நம் கண் முன்னே வந்து செல்கிறார்கள்.
அபி நட்சத்திரா சிறப்பாக நடித்துள்ளார். குழந்தைகள் படிக்க வேண்டும் என்று முயற்சி செய்யும்போதும், முயற்சி தோல்வி அடையும் போதும் இவர் தவிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. காதல் சுகுமார் அவ்வப்போது வந்து சிறிது சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். ஆனால் இவரது காமெடி முழுமையாக நம்மிடையே ரீச் ஆகவில்லை. படத்தின் எடிட்டிங் இன்னும் கூர்மையாக இருந்திருக்க வேண்டும்.
இன்று இந்திய அளவில் பெண்களின் பாதுகாப்பை பற்றி நாம் பேசி வருகிறோம். 150 ஆண்டுகளுக்கு முன்னால் பெண்களின் பாதுகாப்பிற்காக பெண்களே என்ன செய்தார்கள் என்று நாம் யோசிக்க முடியாத ஒரு விஷயத்தை படத்தில் சொல்லி இருப்பதற்கு டைரக்டரை பாராட்டலாம்.
தற்போது நம் தமிழக முதல்வரால் பெண்களின் பாதுகாப்பிற்காக நிறுவப்பட்டுள்ள சிங்கப்பெண் பாதுகாப்பு படை 150 வருடத்திற்கு முன்பே யோசித்ததுதான் என்று இப்படம் சொல்ல வருகிறது. இன்றைய நாகரீக உலகில் பெண்களின் பாதுகாப்பு என்பது ஆண்கள் கையில் இல்லை; பெண்கள் கையில் தான் உள்ளது என்றும் இப்படம் சொல்கிறது. படத்தில் திரைக்கதையில் சில குறைகள் இருந்தாலும் பெண்கள் பாதுகாப்பு என்ற ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொண்டு படத்தை எடுத்ததற்காக இப்படத்தை நாம் பார்க்கலாம்; பாராட்டலாம்!
ஆட்டி : திரைக்கதையை தவிர மற்ற அனைத்து விஷயங்களும் சூப்பர் .