நடிகர் தனுஷின் படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக திருப்பதி மலை அடிவாரத்தில் பக்தர்களின் வாகனங்களை வேறு பாதையில் போலீசார் திருப்பி விட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இயக்குனர் சேகர் காமுலா இயக்கத்தில், தனுஷ் தன்னுடைய 51வது படத்தில் நடித்து வருகிறார். அரசியல் கதைகளத்தில் உருவாக உள்ள இந்த திரைப்படம், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து, மிக முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவும் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் திருப்பதி அலிப்பரி பகுதியில் நடைபெற்ற நிலையில், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களை போலீசார், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சாலை வழியாக திருப்பிவிட்டனர். இதனால் பக்தர்கள், பொதுமக்கள் என பலரும் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த பிரச்சனை பூகம்பமாய் வெடித்ததால் இன்று தனுஷ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், இனி இந்த பகுதியில் ஷூட்டிங் எடுக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் ஷூட்டிங்கில் இருந்த புகைப்படம் ஒன்று லீக்காகியுள்ளது. அதில் நடிகர் தனுஷ் பிச்சைக்காரன் கெட்டப் போட்டிருப்பதால் படத்தின் தனுஷ் கதாபாத்திரம் குறித்த பேச்சுக்கள் எழுந்துள்ளன. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே வெளியிடாத நிலையில் தனுஷின் கதாபாத்திரம் புகைப்படம் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.