

வடிவேலுவுடன் பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து பிரபலமானவர் நடிகர் பாவா லட்சுமணன் . இவர் சமீப காலமாக நோய்வாய்ப்பட்டு கடுமையான உடல் நல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். முன்பு சினிமாவில் அடிக்கடி தோன்றி வந்த அவர் தற்போது சில காலம் உடல்நல பிரச்சனைகள் காரணமாக, சினிமாவில் நடிப்பதிலிருந்து விலகி உள்ளார். தற்போது உடல்நிலை மோசமாகி உள்ள அவரைப் பற்றி தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு ஊடகத்திற்கு நேர்காணல் அளித்திருந்தார்.
பாலாஜி பிரபுவின் நேர்காணலில், " தமிழ் சினிமாவில் பாவா லட்சுமணனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் 35 வருடங்களுக்கு மேலாக சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனர் ஆர்பி.சௌத்ரியிடம் ப்ரொடக்ஷன் மேனேஜராக வேலை செய்தவர். சூப்பர் குட் பிலிம்ஸ் இன் அனைத்து படங்களுக்குமே இவர் தான் மேனேஜராக பணியாற்றியவர். நல்ல மனிதரான பாவா லட்சுமணன் , சிரித்த முகத்துடன் அனைவரிடமும் பழகக்கூடியவர். நான் தயாரித்த ஊதாரி படத்தில், நடித்த போது எனக்கும் அவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது
பல இயக்குனர்களுக்கு முதல் வாய்ப்பு அளித்தவர் பாவா லட்சுமணன். புதுவசந்தம் திரைப்படத்தின் கதையைக் கூட முதலில் பாவா லட்சுமணனிடம் தான் விக்ரமன் கூறினார். அவர்தான் சௌத்திரியிடம் அறிமுகப்படுத்தி அந்த படத்தினை தயாரிக்க வைத்தார்". இப்படித்தான் விக்ரமனின் அறிமுகம் தமிழ் சினிமாவில் இருந்தது. அதேபோல் லிங்குசாமி பட வாய்ப்புகளை தேடி அலைந்து கொண்டிருந்த போது , பாவா லட்சுமணன் தான் தயாரிப்பாளர் சௌத்ரியிடம் அறிமுகப்படுத்தி 'ஆனந்தம் ’ திரைப்படத்திற்கான வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தார். அவர் மட்டுமல்ல சூப்பர் குட் பிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தின் மூலமாக அறிமுகமாகிய பல இயக்குனர்களும், முதலில் பாபா லட்சுமணனிடம் கதை கூறிவிட்டு தான் , அதன் பின்னர் வாய்ப்பினை பெற்றார்கள். அதற்காக இவரிடம் கதை சொல்ல காத்து கிடந்தவர்கள் ஏராளம்.
நீண்ட காலம் சினிமாவை சுற்றியே அவர் ஓடிக் கொண்டிருந்ததால் திருமணம் செய்து கொள்ளவில்லை. இன்று நீரழிவு நோயின் தீவிர தாக்கத்தினால் அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டுள்ளது. சினிமாவில் இருந்த காலத்தில் பணம் சேர்த்து வைத்திருந்தால் இந்த நிலை அவருக்கு ஏற்பட்டிருக்காது. இன்று வாடகை கட்டவும், மருத்துவ செலவுகளுக்கும் கூட பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
கூல் சுரேஷ் அவருக்கு வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்து வீட்டு உபயோக பொருட்களும் வாங்கி கொடுத்துள்ளார். ஜீவா மாதம் தோறும் 15 ஆயிரம் பணம் அனுப்பி வைக்கிறார். டிவி நடிகர் பாலாவும் உதவி செய்துள்ளார். அவருக்கு சம்பந்தமே இல்லாத லெஜெண்ட் சரவணன் 2 லட்ச ரூபாய் உதவி செய்துள்ளார். விஜயகாந்த், விவேக், மனோபாலா , மயில்சாமி போன்ற நடிகர்கள் உயிருடன் இருந்திருந்தால் பாவா லட்சுமணனுக்கு உதவி செய்து இருப்பார்கள், அவருக்கு இது போன்ற நிலைமை வந்திருக்காது என்பதில் வருத்தம் தான்.
இன்று பாவா லட்சுமணன் உதவி கேட்டு போன் செய்யும்போது யாரும் எடுப்பதில்லை. அவருடன் பல பல படங்களில் நடித்த வடிவேலு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. ஆனால், உதவி செய்ய வேண்டும் என்ற எந்த கட்டாயமும் அவருக்கு இல்லை. விவேக், மயில்சாமி போன்றவரிடம் எதிர்பார்த்ததை மற்றவர்களிடம் எதிர்பார்க்க முடியாது ,என்று கூறியுள்ளார்.
இவர் போன்ற நலிவடைந்த கலைஞர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு கொடுக்க நடைமுறைகளை உருவாக்க வேண்டும். இந்தியாவில் அதிக வருமானம் கொண்ட சினிமாத்துறைகளில் தமிழ் சினிமா முன்னணியில் இருப்பதால் , அவர்களுக்கு இது போன்ற உதவிகள் ஒரு பெரிய விஷயமாக இருக்காது.