
சமீபகாலமாகவே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்கள் பலரும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பணமின்றி தவித்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில், தற்போது குணச்சித்திரம் மற்றும் காமெடி ரோல்களில் நடித்த 'சூப்பர் குட்' சுப்பிரமணி புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு 4ஆம் நிலை என சொல்லப்படும் advanced stage புற்றுநோய் இருக்கிறது.
பல வறுமை, கஷ்டங்களுக்கு பிறகு கனவுகளுடன் சினிமாவுக்குள் வந்தவர்தான் சூப்பர் குட் சுப்பிரமணி! இவர் இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்தார். சூப்பர் குட் பிலிம்ஸில் பணியாற்றியதால் இவர் சூப்பர் குட் சுப்பிரமணி என அழைக்கப்படுகிறார். இவர் பல படங்களில் உதவி இயக்குநராக நடித்துள்ளார். அஜித்தின் சிட்டிசன் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். கதையை தயார் செய்துவிட்டு சூப்பர் குட் பிலிம்ஸில் கொடுத்து ஓகே வாங்கியிருந்தார். ஆனாலும் அவரால் இயக்குநராக முடியவில்லை.
எனினும் சினிமாவில் அவர் குணச்சித்திரம், காமெடி ரோல்களில் நடித்து வந்தார். காலா, பரியேறும் பெருமாள், பிசாசு, ஜெய் பீம், வானம் கொட்டட்டும், ஹீரோ, அருவம் , கூர்கா, ரஜினிமுருகன், அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் ஏற்ற கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார். அதிலும் பரியேறும் பெருமாள், ஜெய்பீம் படங்களில் அவர் மிகச் சிறந்த நடிப்பை வெளியப்படுத்தியிருந்தார். ஜெய் பீம் படத்தில் போலீசாக நடித்து பலரது மனதிலும் நீங்கா இடம் பிடித்துவிட்டார் என்றே சொல்லலாம். அவர் கடைசியாக பரமன் படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு புற்றுநோய் 4 ஆம் கட்டத்தில் இருப்பதும், அவர் கடுமையான நிதி நெருக்கடியால் போராடி வருவதும் தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், ஏதேனும் நடிகர்கள் அவருக்கு சென்று உதவி செய்ய வேண்டும் என இணையத்தில் கோரிக்கை விடுத்து செய்தியை பரப்பி வருகின்றனர். மேலும் அவர் மீண்டு வரவேண்டும் எனவும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதற்கிடையில் இவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.