நாளை மார்க் ஆண்டனி.. திருப்பதி ஏழுமலையானிடம் சரணடைந்த நடிகர் விஷால்!

விஷால்
விஷால்ADMIN
Updated on

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவான மார்க் ஆண்டனி திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. பீரியட் மூவியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் டைம் டிராவல், ஆக்சன் த்ரில்லர், கேங்ஸ்டர் என பலவிதமான ஜேனரில் இருக்கும் என்று விமர்சகர்கள் கணித்துள்ளனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

படம் வெளியாவதில் பல சிக்கல்களும் ஏற்பட்டது. இந்த தடைகளை மீறி வெற்றிகரமாக நாளை படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படம் வெற்றிபெற வேண்டி நடிகர் விஷால் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய விஷால், நாளை மார்க் ஆண்டனி திரைப்படம் திரைக்கு வர உள்ளது. எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து படத்தை தயார் செய்து இருக்கிறோம். இறுதியாக திரைப்படத்தின் வெற்றிக்காக இன்று ஏழுமலையானிடம் சரணடைந்திருக்கிறேன் என்று கூறினார்.

நடிகர் சங்க கட்டிடம் கட்ட தேவையான பணத்தை வங்கிகள் விரைவில் வழங்க உள்ளன. கட்டிடம் கட்டுவதற்கு தேவையான பணத்தை நிகழ்ச்சி நடத்தி திரட்டும் எண்ணம் தற்போது இல்லை என்றார். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு இருப்பது பற்றி கேட்டபோது, அது பற்றி கேள்விப்பட்டேன். நான் ஊர் ஊராக சுற்றி கொண்டிருக்கிறேன். எனவே எனக்கு முழுமையான விவரங்கள் தெரியாது. கைது சரியா , தவறா என்பதை போலீசாரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறி சென்றார் விஷால்.

logo
Kalki Online
kalkionline.com