வசூலில் மீண்டும் சம்பவம் செய்திருக்கும் சுந்தர் சி.யின் ‘அரண்மனை 4’ திரைப்படம்!

Aranmanai 4
Aranmanai 4

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த மூன்றாம் தேதி ரிலீசான, ‘அரண்மனை 4’ திரைப்படம், நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சமீப காலமாகவே ரீ ரிலீஸும், மற்ற மொழிப் படங்கள் மட்டுமே ஹிட் அடித்து வரும் நிலையில், தற்போது அரண்மனை 4 படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர்.

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த மூன்றாம் தேதி ரிலீஸானது அரண்மனை 4. இதில் சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதற்கு முன்பு வெளியான அரண்மனை படத்தின் மற்ற பாகங்களை விடவும் இந்தப் படம் அருமையாக வந்திருப்பதாக ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனங்களைக் கூறி வருகின்றனர். இப்படி விமர்சன ரீதியாக பட்டையை கிளப்பிவரும் அரண்மனை 4 திரைப்படம் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சுந்தர்.சி. 90களில் ஆரம்பித்த இவரது இயக்குநர் பயணம் இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கும் சுந்தர்.சிக்கு எகென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீப காலமாகவே பழைய சுந்தர்.சி எங்கே சென்றார், ‘அன்பே சிவம்’ போன்ற படங்கள் ஏன் எடுக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

விஜய் ஆண்டனியும் தன்னுடைய படத்தை ‘அன்பே சிவம்’ மாதிரி ஆக்கிவிடாதீர்கள் என்று கூட கூறியிருந்தார். பலருக்கும் ‘அன்பே சிவம்’ திரைப்படம் சுந்தர்.சி தன் எடுத்திருக்கிறார் என்று தெரியாது. இதைத் தெரிந்த பலரும் பழைய சுந்தர்.சி வேண்டுமென கேட்டு வருகின்றனர். இதற்கு பதிலளித்த சுந்தர்.சி காட்டமாக தனது வெறுப்பை கொட்டினார். ‘நல்ல படம் எடுத்தபோது அதைக் கொண்டாடத் தவறிய ரசிகர்கள், இப்போது மட்டும் ஏன் கேட்கிறார்கள்’ என கொந்தளித்தார்.

இயக்குநராக இருந்த சுந்தர்.சி நடிப்பின் பக்கமும் சென்றார். அந்த வகையில் அவர் நடித்த ‘தலைநகரம்’ உள்ளிட்ட படங்களும் ஹிட்டடித்திருக்கின்றன. இருந்தாலும் அவர் தொடர்ந்து படங்கள் இயக்க வேண்டும் என்று சினிமா ரசிகர்கள் தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தனர். அதனையடுத்து சில காலம் கழித்து ‘கலகலப்பு’ படம் மூலம் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்தார் சுந்தர் சி. அந்தப் படம் மெகா ஹிட்டானது.

தொடர்ந்து அவர் கையிலெடுத்த படம்தான் அரண்மனை. முதல் பாகம் நல்ல வெற்றி பெற, அடுத்தடுத்து 2, 3 பாகங்களை எடுத்தார். ஆனால், அவை அந்த அளவிற்கு வெற்றியை தரவில்லை என்றாலும் 4ம் பாகத்தையும் உறுதியுடன் எடுத்தார். இந்தப் படம்தான் கடந்த 3ம் தேதி ரிலீசானது. வெறும் 3 நாட்களில் இந்தப் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, படம் வெளியான முதல் நாளில் 4.65 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 6.25 கோடி ரூபாயும் வசூல் செய்து முதல் இரண்டு நாட்களிலேயே 10 கோடி ரூபாய் வசூலை தாண்டியது. மூன்றாவது நாளான நேற்று மட்டும் இந்தப் படம் கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. எனவே, படம் வெளியாகி மூன்று நாட்களில் மொத்தம் இந்தப் படம் 17 கோடி ரூபாய் வரை வசூலை அள்ளியிருப்பதாகத் தெரிகிறது. இதற்கு பலரும் சுந்தர்.சிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com