

ஏஜிஎஸ் எண்டர்டெயின் நிறுவனம் தயாரித்துள்ள 'பிளாஸ்ட்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜூன் , ப்ரீத்தி முகுந்தன், அபிராமி ஆகியோர் கலந்து கொண்டனர். பிளாஸ்ட் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சுபாஷ் கே.ராஜ் இயக்கி உள்ளார். கேஜிஎஃப் திரைப்படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இந்த திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
பிளாஸ்ட் திரைப்படம் கராத்தே மாஸ்டரான அப்பாவும்(அர்ஜூன்), கராத்தே வீராங்கனையான (பிரித்தி முகுந்தன்) மகளும், மற்றவர்களுக்கு பிரச்சனைக்கு ,தட்டி கேட்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இது கராத்தே மாஸ்டர் மனைவியான அபிராமிக்கு சுத்தமாக பிடிப்பது இல்லை. ஒரு கட்டத்தில் அபிராமியும் சண்டையிடுவதில் வல்லவர் என்பது படத்தின் சுவாரசியத்தை கூட்டுகிறது. அர்ஜூன் பல வருடங்கள் கழித்து மீண்டும் திரைப்படத்தின் கதாநாயகனாக அதிரடி ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிளாஸ்ட் திரைப்படத்தை பார்த்த பின்னர் அர்ஜூன் " இதற்கு முன் பிரீத்தி முகுந்தன் சிறந்த டான்ஸர் என்று அறியப்பட்டார், இனி சிறந்த ஃபைட்டர் என்றும் அழைக்கப்படுவார். 25 வருடங்கள் கழித்து அபிராமியுடன் இணைந்து நடித்துள்ளேன். இந்த படத்தில் என்னைப் போலவே அவரும் சண்டை செய்து இருக்கிறார். இந்த படத்தில் எல்லோருக்கும் நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளது. படம் பார்த்தவர்கள் பாராட்டும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது
இந்த படத்தின் நோக்கம் "பெண்கள் தைரியமாக சண்டை போட வேண்டும்" என்பது தான். இப்போது உள்ள சமூகத்தில் இப்படித்தான் பெண்களை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். நானும் என் பெண்ணை இப்படித்தான் வளர்த்தேன். இந்த திரைப்படம் பிரச்சனை எங்கே நடந்தாலும் அதை ஆண், பெண் வித்தியாசமின்றி எதிர்த்து போராட வேண்டும் என்று சொல்ல வருகிறது. வருங்காலத்தில் பள்ளிக்கூடங்களில் தற்காப்பு கலையை ஒரு பாடமாக வைத்திருக்க வேண்டும் , என்று அர்ஜூன் தெரிவித்தார்.
அதன் பிறகு முதல்வர் விஜயை பற்றி பேசிய அர்ஜூன் முதல்வன் 2 பாகம் வருமா என்று எனக்கு தெரியாது. ஆனால் அந்தப் படத்தினை விஜய்யுடன் ஒப்பிடுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. விஜயின் ஆட்சி சினிமாவை பார்ப்பது போல இருக்கிறது. அவர் இப்போது தானே ஆட்சியை தொடங்கியிருக்கிறார். அவர் மீது நிறைய நம்பிக்கை உள்ளது, நிச்சயமாக 100% நல்லது செய்வார், அதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன.என்று கூறியுள்ளார்
அதன் பிறகு சனாதன தர்மத்தை பற்றி அர்ஜூன் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.சனாதனம் என்பது மதம் சார்ந்தது கிடையாது. சனாதனம் வாழ்க்கையின் வழி! நாம் வாழ்க்கையில் எப்படி நடந்து கொண்டோம்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? போன்றவற்றை பற்றியது.
நாம் தவறு செய்யக் கூடாது, திருடக்கூடாது , பிறரின் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது இது போன்ற வாழ்வியல் முறைகளை கடைபிடிப்பது தான் சனாதான தர்மம். சிறுவயதில் நம்மை பெற்றோர்கள் அன்புடன் வளர்த்துள்ளனர், நாம் வளர்ந்த பின்னர் அவர்களை கடவுள் போல் மதித்து பராமரிக்க வேண்டும் என்பதைத்தான் சனாதன தர்மம் போதிக்கிறது.
சனாதனம் இருக்கக் கூடாது என்றால், அவரவர் வீட்டிலுள்ள அம்மா அப்பாவை வெளியே துரத்தி விட வேண்டும். அது முடியுமா? எனக்கு தெரிந்ததை நான் சொல்கிறேன்.இதை அனைவரும் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும், என்று அர்ஜூன் கூறியுள்ளார்.