சர்ச்சை மேல் சர்ச்சை! தளபதியை நோக்கி பாயும் அம்புகள்!

varisu
varisu

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

திரைப்படங்களைப் பொறுத்தவரையில், சர்ச்சை என்பது வராமல் சினிமா வெளிவருமா என்பதுபோல் பிரபலமான நடிகர்களின் படங்கள் சர்ச்சையில் சிக்கி பின்னர் தியேட்டர்களில் வெளியாகும்.

அந்த வகையில் தற்போது அடிக்கடி சர்சையில் மாட்டி வருவது தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' திரைப்படம்.

தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த இயக்குனர் வம்சி பாடிபல்லி இயக்கத்தில் முதன்முறையாக தளபதி விஜய் நடிக்கும் படம் தான் 'வாரிசு'. இயக்குநர் வம்சியின் படங்கள் என்றாலே சென்டிமென்ட் காட்சிகள் அதிகம் இடம்பெறும். அந்த வகையில் இந்த படத்திலும் சென்டிமென்ட், எமோஷன் எல்லாம் கலந்துகட்டி இருக்கும் என படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படம் பொங்கலன்று ரிலீஸ் ஆகும் என கடந்த தீபாவளியின் போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், சமீபத்தில் படத்தின் முதல் பாடலாக 'ரஞ்சிதமே' பாடல் வெளியானது. கவிஞர் விவேக் பாடல் வரிகள் எழுத தமன் இசையமைத்து இருக்கிறார். பாடல் வெளியானதுமே ராக்கெட் வேகத்தில் அனைவரின் மனதிலும் ஃபேவரிட் லிஸ்ட்டில் இணைந்துவிட்டது.

ஆனாலும் அந்த இடத்தில் சர்ச்சை, இந்த இடத்தில் சர்ச்சை என பந்தாடப்பட்டு வருகிறது 'ரஞ்சிதமே' பாடல்.

முதலில், “கட்டு மல்லி கட்டி வெச்சா வட்ட கருப்பு பொட்டு வெச்சா” என்ற இந்த பாடலின் வரிகள் ஏற்கனவே பல சர்ச்சையில் சிக்கியது. ஏற்கெனவே வெளியான படத்தின் மெட்டை தமன் பயன்படுத்தி உள்ளார் எனவும், ‘செல்லம்மா செல்லம்மா’ பாடலில் சிவகார்த்திகேயன் போட்டுள்ள நடன மூவ்மென்ட்களை, விஜய் அப்படியே காப்பி அடித்துவிட்டார் என்றும் பல சர்ச்சைகள் சமூகவலைத்தளங்களில் உலவி வந்த நிலையில், தற்போது மீண்டும் பாடல் வரிகளில் பிரச்சினை முளைத்துள்ளது.

இந்தப்பாடலில் 'உச்சு கொட்டும் நேரத்திலே உச்சகட்டம் தொட்டவளே' என்ற வரிகள்தான் இப்போது கடும் எதிர்ப்புக்குள்ளாகி உள்ளது.

பிரபலமான நடிகர்களின் டான்ஸ், பாடல் வரிகள் இவையெல்லாம் இளம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சிறுவயதுடைய பிள்ளைகளாலும் கவரப்படும். பாட்டின் அர்த்தம் தெரியாமலேயே சிறுவர்கள் அதை விரும்பி பாடுவார்கள். அப்படிப் பார்க்கையில், இதுபோன்ற வரிகளை விஜய் போன்ற பிரபல நடிகர்கள் எப்படி அனுமதிக்கிறார்கள். இரட்டை அர்த்த வசனங்கள், இரட்டை அர்த்த பாடல் வரிகள் இதுபோன்றவற்றை தவிர்ப்பதே ஆரோக்கியமான சினிமாவிற்கு வழிவகுக்கும்.

நடிகர்களும் இதைப் புரிந்துகொண்டு சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com