சிம்பு நடித்து வந்த ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 23ம் முடிவடைந்தது. டைரக்டர் கிருஷ்ணா இயக்கும் இந்தப் படம், கன்னடத்தில் வெற்றி பெற்ற 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வருகிறது. இப்படத்தில் கெளதம் கார்த்திக், கலையரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படம் டிசம்பரில் வெளியாகவிருந்தது. இப்படத்திற்கு எ .ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
சிம்பு கடந்தாண்டு வெளியான மாநாடு திரைப்படம் மூலம் ஒரு வெற்றியை கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் ‘வெந்து தணிந்தது காடு' திரைப்படம், சிம்புவுக்கு மேலும் ஒரு வெற்றியை கொடுத்தது. இதனால், மீண்டும் சிம்புவின் படங்களுக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்புகாணப்படுகிறது. இந்நிலையில், தற்போது அவர் நடித்து வந்த ‘பத்து தல' படத்தின்ஷூட்டிங், கடந்த மாதம் 23ம் தேதி நிறைவடைந்தது. ஆனால், டிசம்பர் மாதம் ரிலீஸாகவிருந்த பத்து தல, சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வெந்து தணிந்தது காடு படத்தைத் தொடர்ந்து சிம்பு ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த பத்து தல, அடுத்தாண்டு ரிலீஸாகும் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இந்தப் படம் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு, பிப்ரவரி 3ம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
சிம்புவின் ரசிகர்களுக்கு அவரது பிறந்தநாள் ட்ரீட்டாக இருக்க வேண்டும் என படக் குழு முடிவு செய்துள்ளதாம். மேலும், தற்போது தான் சூட்டிங் நிறைவானதால், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் இயக்குநர் கிருஷ்ணா வேகம் காட்டியுள்ளாராம்.