சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான சூரியின் கொட்டுக்காளி.. மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன்!

’கொட்டுக்காளி’ படம்
’கொட்டுக்காளி’ படம்

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக திரைப்படங்களுக்கான பிரிவில் கொட்டுக்காளி திரைப்படம் தேர்வாகியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை படத்திற்கு பிறகு அடுத்தகட்டமாக நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே தயாரிப்பில் சூரி ஹீரோவாக நடிக்கும் கொட்டுக்காளி படத்தின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமல்லாமல், படங்களை தயாரித்தும் வருகிறார்.

அந்த வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ‘கனா‘ படத்தை தயாரித்திருந்தார். தொடர்ந்து அவர் தற்போது தயாரிக்கும் புதிய படமான கொட்டுக்காளியில் சூரி நாயகனாக நடிக்கிறார். அவருடன் அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சர்வதேச கவனம் பெற்ற ’கூழாங்கல்’ பட புகழ் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கும் இப்படத்திற்கு ’கொட்டுக்காளி’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்திற்கு சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் பிரத்தியேக திரையிடலுக்காக கொட்டுக்காளி திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை கொட்டுக்காளி திரைப்படம் பெற்றுள்ளது.

கொட்டுக்காளி திரைப்படம் 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக திரைப்படங்களுக்கான பிரிவில் தேர்வாகியுள்ளதை நடிகர் சிவகார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டு அவரது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். மேலும், படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

அதில், பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் பிரத்யேக திரையிடலுக்கு தேர்வாகியுள்ள முதல் தமிழ்த்திரைப்படம் கொட்டுக்காளி என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

இது போன்றதொரு பெருமைக்குரிய படைப்பை தயாரிக்க உத்வேகம் அளித்து அதை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லவும் ஊக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கும் எனது அன்பிற்குரிய ரசிகர்களாகிய உங்களுக்கு அனைத்து பெருமையும் சேரும் என பதிவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com