
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகர் சிபி தற்போது பெயரிடப்படாத படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் சிபி. இவர் வஞ்சகர் உலகம் மற்றும் துணிவு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜயினுடைய மாணவராகவும் நடித்திருந்தார்.
இந்த நிலையில் அறிமுக இயக்குனர் பிரகாஷ் கிருஷ்ணன் இயக்கத்தில், எஸ் எம் இப்ராகிம்-யின் கிரவுன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தயாராகும் புதிய படத்தில் நடிகர் சிபி கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இத்திரைப்படத்தில் குஷிதா, பருத்திவீரன் சரவணன், ஜெயப்பிரகாஷ், நிரோஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். மேலும் படத்திற்கு பாபு தமிழ் வசனம் எழுதியுள்ளார். கோபி கிருஷ்ணன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கேபர் வாசுகி இசையமைக்கிறார். தற்போது பெயரிடப்படாத இத்திரைப்படத்தினுடைய படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
பிக் பாஸ் சீசன் 5-யில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று 12 லட்சம் ரூபாய் பணத்துடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சிபி. அதன்பிறகு தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளை பெற்று சிறுக சிறுக முன்னேறி, தற்போது கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். மேலும் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பாலாஜி மாதவன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.